கிழக்கில் உடன் நடைமுறைக்கு வரும் ரணிலின் உத்தரவு
கிழக்கு பெருநகர அபிவிருத்தி திட்டத்தை தயாரிக்கும் போது சுற்றுலா, மீன்பிடி, கைத்தொழில் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் அதிக கவனம் செலுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நேற்று (29) நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கிழக்கு பெருநகர அபிவிருத்தி திட்டம் தொடர்பில் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இதன்போது, கிழக்குப் பெருநகர அபிவிருத்தித் திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய அமைச்சர், அதன் இறுதி மதிப்பாய்வுப் பணிகளை ஜூன் மாதம் ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ரணிலின் பணிப்புரை
அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் கிழக்கு பெருநகர அபிவிருத்தி திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இதன் அடிப்படையிலேயே, இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர்,
“நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஆலோசனையின் பேரில் சிங்கப்பூரின் நகர வடிவமைப்பு நிறுவனம் கிழக்குப் பெருநகர வளர்ச்சித் திட்டத்தைத் தயாரித்து வருகிறது. இதன்போது முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய 3 மாவட்டங்களுக்கும் இத்திட்டம் தயாரிக்கப்படும்.இதன் கீழ் இம்மாவட்டங்கள் பொருளாதார, வர்த்தக, கலாச்சார மற்றும் சுற்றாடல் ரீதியாக அபிவிருத்தி செய்யப்படும்.
இங்கு, நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. எனவே, தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப இந்த அபிவிருத்தித் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும்.
அதன் மீளாய்வு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு, நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த அபிவிருத்தித் திட்டத்தை வர்த்தமானி மூலம் வெளியிடும்” என தெரிவித்திருந்தார்.
சுற்றுச்சூழல் சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி
இச்செயற்றிட்டத்தின் ஊடாக கிழக்குப் பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி மற்றும் நிலாவெளி பகுதிகள் கடல் மற்றும் சூழல் சுற்றுலா வலயங்களாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தின் வெருகல் மற்றும் பாசிக்குடா பகுதிகள் மீன்பிடி மற்றும் சுற்றுலா வலயங்களாகவும், அம்பாறை மாவட்டத்தில் கோமாரி முதல் பானம வரையான பகுதிகள் கடலோர சுற்றுச்சூழல் சுற்றுலா வலயங்களாகவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
அத்துடன், கிண்ணியா மீன்பிடி கைத்தொழில் நகரமாகவும், புல்மோட்டை நகரம் கனிம கைத்தொழில் நகரமாகவும், மூதூர் நகரம் பசுமை சக்தி நகரமாகவும் அபிவிருத்தி செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.
