கிழக்கு பல்கலைக்கழகம் உலகத்தரம்வாய்ந்த சத்ய சாய் சஞ்சீவினி வைத்தியசேவை நிறுவனத்துடன் இணைந்தது (படங்கள்)
ஸ்ரீ சத்ய சாய் கருணா நிலைய அறக்கட்டளை அமைப்பின் சத்ய சாய் சஞ்சீவினி வைத்தியசாலை கடந்த பல வருடங்களாக கிழக்கின் கிரான்குளம் பிரதேசத்தில் தனது சேவைகளை இலவசமாக புரிந்து வந்த நிலையில் அதன் அடுத்த பரிமாணமாக சிறுவர் இருதய சத்திரசிகிச்சை பிரிவு ஒன்றை அண்மையில் திறந்து வைத்துள்ளது.
ஸ்ரீ சத்ய சாய் கருணா நிலைய அறக்கட்டளை அமைப்பின் ஸ்தாபகர் சற்குரு ஸ்ரீ மதுசூதன் சாய் மற்றும் இலங்கைக்கான தலைவர் பென்னி ஜயவர்தன ஆகியோருடன் அறக்கட்டளையின் பெரும் எண்ணிக்கையிலான சர்வதேச உறுப்பினர்களும் பல நாடுகளில் இருந்து இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த வைத்திய சேவை முழுவதும் இலவசமாகவே வழங்கப்படும் என்பது எமது பிரதேச பிள்ளைகள் பெற்றுள்ள மிக பெரிய ஆசீர்வாதமாகும் .
மேலும் ஸ்ரீ சத்ய சாய் கருணா நிலைய அறக்கட்டளை தமது சேவை மற்றும் மருத்துவம் சார் கற்கைகளை விரிவுபடுத்தும் நோக்கில் கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்படுவதற்கான முன்மொழிவு கொண்டுவரப்பட்டு அதனை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வும் திறப்புவிழாவோடு இணைந்ததாக இடம்பெற்றது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் மற்றும் பீடாதிபதிகள், வைத்திய நிபுணர்கள்,பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பதிவாளர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்கள் உரையாற்றுகையில், 'இந்த வைத்தியசாலை கிழக்கிற்கு மட்டுமல்ல முழு இலங்கைக்கும் கிடைத்த பெரிய வரப்பிரசாதம் எனவும் கிழக்கு பல்கலைக் கழகத்தின் சவுக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம் , சமுகம் மற்றும் தொழில்துறையை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் பிரிவு (Center for Industry Community Linkage) என்பவற்றுடன் இணைந்து பங்காளராக செயற்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று மிக விரைவில் கைச்சாத்திடப்படும் எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து தம் உரையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையில் சிக்கி மக்கள் தவிக்கின்ற இக்கட்டான நிலையில் எமது பிரதேசத்தில் சமுக-பராமரிப்பு சிறுவர் மற்றும் கர்ப்பிணி தாய்மார் போசாக்கு திட்டங்கள், தொற்றா நோய்கள் தொடர்பான பொதுமக்கள் சேவைகள் துறைசார் வைத்திய நிபுணர்களின் சேவைகளை மேம்படுத்தல் பல்கலைக்கழகத்துடன் இணைந்ததான .ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல் என்பவை தொடர்பான சமுகத்தை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் சத்ய சாய் கருணா நிலைய அறக்கட்டளை அமைப்பின் செயற்படுகளில் பல்கலைக்கழகம் இணைந்துகொள்ளும் எனவும் குறிப்பிடடார்.
முழுமையான அபிவிருத்திக்கான “பல்கலைக்கழக-சவுக்கடி மாதிரிக்கிராம” செயற்பாடுகளின் ஓர் பகுதியாக அங்கிருந்து தெரிவுசெய்யப்படட மந்தபோஷாக்கான கர்ப்பிணி தாய்மார் மற்றும் ஐந்து வயதிற்கு குறைந்த பிள்ளைகளிற்கு சாய் சஞ்சீவினி வைத்தியசாலையினால் உற்பத்தி செய்யப்படட போசாக்குணவு பொதிகள் இந்நிகழ்வின்போது வழங்கிவைக்கப்படடமை சிறப்பம்சமாக அமைந்தது.
கிழக்கு பல்கலைக் கழகத்தின் சவுக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் விரிவுரையாளர்களான வைத்தியர் கந்தசாமி அருளானந்தம், வைத்தியர் வைதேஹி ரஜீவன் மற்றும் சுவாமி விபுலானந்தா இசை நடன கல்லூரி விரிவுரையாளர் விமல்ராஜ் ஆகியோர் ஸ்ரீ சத்ய சாய் கருணா நிலைய அறகட்டளை உடனான பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைவை நெறிப்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழகத்தின் சமுகம் தொடர்பான சிந்தனை அதன் முன்னெடுப்புகள் என்பவை இவ்வுடன்படிக்கையினூடாக வெளிப்படும் என்பது உறுதியாகும்.