கிழக்குப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பிரிவிற்கு கிடைத்த அங்கீகாரம்!
கிழக்கு பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பிரிவை, பீடமாகத் தரமுயர்த்த சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், திருகோணமலை வளாக முதல்வராக பணியாற்றிய காலப்பகுதியில் சித்த மருத்துவ பிரிவை பீடமாக தரமுயர்த்தும் முயற்சிகளை மேற்கொண்டு அதற்கான பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்த நிலையிலேயே இத்தரமுயர்வுக்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
தரமுயர்வு
அதற்கமைவாக இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் தற்போது காணப்படுகின்ற சித்த மருத்துவ பிரிவை, பீடமாக தரமுயர்த்துதல் தொடர்பில் 2023.02.06 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
அதன்போது, போதியளவு கல்வி மற்றும் ஊழியர்கள் வசதிகள் உள்ளனவா என்பதை ஆராய்ந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிக்கையைப் பெற்றுக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய, சித்த மருத்துவ பிரிவை பீடமாக மாற்றம் செய்வதற்குப் போதுமானளவு மனிதவளம் மற்றும் பௌதீக வளங்கள் காணப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
அமைச்சரவை அங்கீகாரம்
கல்வி அமைச்சர் சமர்ப்பித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு குறித்த சித்த மருத்துப் பிரிவை, பீடமாக தரமுயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 2023.03.27ம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இத்தரமுயர்வு விடயத்தில் திருகோணமலை வளாக தற்போதைய முதல்வர் மற்றும் அதன் ஊழியர்களின் பங்களிப்பும் வழங்கப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
