எரியும் நெருப்பை எண்ணெய் ஊற்றி பற்ற வைக்கும் தமிழ் தலைமைகள் - டக்ளஸ் விமர்சனம்
ஈபிடிபி -தமிழ் தலைமைகள் வேறுபாடு
தமக்கும், சுய இலாப அரசியலை மேற்கொள்ளும் தமிழ் தலைமைகளுக்கும் உள்ள வேறுபாட்டை தமது கட்சியின் ஆதரவாளர்களுக்கு எடுத்து விளக்கியுள்ளார் அமைச்சரும் ஈபிடிபி கட்சியின் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் அவலங்களில் குதூகல மகிழ்ச்சி
ஏமாற்றும் தமிழ் தலைமைகள் மக்களின் அவலங்களில் குதூகல மகிழ்ச்சியடைகின்றன. அவலங்களை தீர விடாது தடுத்து வைத்து அவர்கள் அடுத்த தேர்தல் வெற்றி குறித்து கனவு காண்கிறார்கள்.
ஆனால், ஈ.பி.டி.பி. யினராகிய நாம் அவலங்களை தீர்த்து வைத்து, மக்களின் மாற்றத்தை நோக்கி பயணிக்க விரும்புகிறோம்.
எரியும் நெருப்பை நிரந்தரமாக அணைக்க முயற்சி
எங்காவது ஓரிடத்தில் நெருப்பு எரிகின்றது என்றால், அதில் அவர்கள் எண்ணை ஊற்றி பற்றி எரிய வைக்கிறார்கள். ஆனால், நாம் எரிகின்ற இடத்தில் தண்ணீரை ஊற்றி எரியும் நெருப்பை நிரந்தரமாக அணைய வைக்க விரும்புகிறோம்.

இதுவே எமக்கும் ஏனைய சுயலாப தமிழ் அரசியல் கட்சி தலைமைகளுக்கும் இருக்கும் வேறுபாடு.
எமது நடைமுறைச் சாத்தியமான அரசியல் வழிமுறை பட்டிதொட்டி எங்கும் நெருப்பாக பற்றிக்கொள்ளும் வகையில் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.