அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் பொறிமுறையை ஏற்க மாட்டோம் - எஸ்.எம்.சந்திரசேன
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை நாடும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாதென காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன (SM Chandrasena) தெரிவித்துள்ளார்.
கொரோனா தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் நாட்டில் பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்வதாக அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
''நெருக்கடியான நிலைமையை சீர்செய்ய அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. மாற்று வழிமுறைமை ஊடாக தற்போதைய நிலைமையினை சமாளிக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநரும் உத்தியோகப்பூர்வமாக அறிவுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் ஒரு பொறிமுறையாக சர்வதேச நாணய நிதியம் காணப்படுவதால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து நாணய நிதியத்தை நாடுமாறு வலியுறுத்துகிறார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், அது அரச ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், அரச செயலொழுங்கிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பெரும்பாலான அமைச்சர்கள் அமைச்சரவையின் போது எடுத்துரைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.