இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கு பாரிய சிக்கல்
உக்ரைனில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக அடுத்த சில மாதங்களில் இலங்கை மற்றும் ஏனைய தெற்காசிய நாடுகளுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கருத்து வெளியிட்ட முன்னாள் பிரதமர் விக்ரமசிங்க, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக மசகு எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன், உலகம் தற்போது கோதுமை மா மற்றும் சோளத்தின் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டினார்.
உக்ரைனில் இடம்பெறும் போர் தொடர்ந்தால் விலை மேலும் அதிகரிக்கும் என ரணில் விக்மரசிங்க எச்சரித்துள்ளார்.
இலங்கையர்களுக்கு 2022 ஆம் ஆண்டு கடினமானது என்றும், பொருளாதார நெருக்கடியின் மோசமான நிலை இன்னும் வரவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் குறிப்பிட்டார்.
2021 ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஆதரவைப் பெற அரசாங்கம் மறுத்தமை மற்றும் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அது பெரும் நிறுவனங்களுக்கு வழங்கிய வரிச்சலுகைகள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பங்களித்ததாக ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
கொவிட் - 19 தொற்றானது அனைத்து நாடுகளையும் பாதித்த போதிலும், தற்போதைய நிர்வாகத்தின் நடவடிக்கைகள் காரணமாக இலங்கை தற்போதுள்ள பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக ரணில் விக்மரசிங்க மேலும் குறிப்பிட்டார்.
