கல்வி புரட்சிக்கு என்றும் துணை : பாரத் அருள்சாமி அளித்த உறுதிமொழி
கல்வி புரட்சி மூலமே மலையகத்தில் நிலையானதொரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றும் மலையக கல்வி அபிவிருத்திக்கு எப்போதும் துணை நிற்பதாகவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி (Bharath Arulsamy) தெரிவித்துள்ளார்.
கண்டி, மஹியாவ கலைமகள் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு உட்கட்டமைப்பு கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது உரையாற்றிய அவர், “மஹியாவ கலைமகள் வித்தியாலயமானது வரலாற்று சிறப்புமிக்க பாடசாலையாகும்.கண்டி நகர எல்லைக்குள் உள்ள மூன்று தமிழ்ப் பாடசாலைகளில் கலைமகள் வித்தியாலயத்துக்கென தனி சிறப்பு உள்ளது.
சிறந்த தலைமைத்துவம்
இக்கல்லூரியின் அதிபர், எனது ஆசான் சபாபதி, பலருக்கு கல்வி கண் திறந்தவர். மிகவும் சிறப்பாக கல்வி அமுதூட்டி பல நற்பிரஜைகளை சமூகமயப்படுத்தியவர், எனது வாழ்விலும் அவர் மறக்க முடியாத நபர்.

இன்று நான் சிறந்த நிலையில் இருப்பதற்கு அவர் கற்று தந்த கணித பாடமும் பெரிதும் கை கொடுத்தது. அவரின் வழிகாட்டலால் தான் பரிட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெறமுடிந்தது.
மிகவும் தலைசிறந்த ஆசானான அவர், ஒரு அதிபராக சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி, இப்பாடசாலையில் பல மாற்றங்களை ஏற்படுத்திவருகின்றார்.
பாடசாலையின் சாதாரணதரம் மற்றும் உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் திருப்தியடையக்கூடிய வகையில் உள்ளது.
பாடசாலை நிர்வாகமும் சிறப்பாக நடைபெறுகின்றது.
கலை நிகழ்வுகள், வலய, மாகாண மற்றும் தேசிய மட்ட போட்டிகளிலும் பங்கேற்று திறமையை மாணவர்கள் வெளிப்படுத்திவருகின்றனர்.
அதேபோல இப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினர் சிறந்த முன்னுதாரணத்தை சமூகத்துக்கு வழங்கிவருகின்றனர்.
அறிவெழுச்சி வேலைத்திட்டடம்
இத்திட்டத்துக்குரிய நிதி உதவியை அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனையின் பிரகாரம் நாம் வழங்கி இருந்தாலும் பழைய மாணவர்களின் அர்ப்பணிப்பதால் அந்த நிதிக்கும் மேலதிகமாக நிதி திரட்டி சேவைகளை செய்து, திட்டத்தை பூரணப்படுத்தியுள்ளனர்.அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடன் மலையகத்தில் கல்வித்துறையை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கி பல திட்டங்களை செயல்படுத்திவருகின்றோம்.
இந்திய அரசும் எமக்குரிய உதவிகளை வழங்கிவருகின்றது. அறிவெழுச்சி வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெறும். இலங்கைக்கான இந்திய தூதுவரும் இந்நிகழ்வில் பங்கேற்பார்.
மத்திய மாகாணசபை ஊடாக மலையக கல்வி மேம்பாட்டுக்கு எனது தந்தை அமரர்அருள்சாமி வழங்கிய சேவைகளையும் மறந்துவிடமுடியாது. கல்வி புரட்சிமூலமே மலையகத்தில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நம்புகின்றோம்.
அதற்காகவே கல்விக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்கிவருகின்றோம். மஹியாவ கலைமகள் கல்லூரிக்கு மேலும் நிதி ஒதுக்கீடுகளை வழங்கவும் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |