தமிழகத்தில் உள்ள ஈழத்து தமிழ் ஏதிலிகள் சென்னையில் போராட்டம்..!
தமிழகத்தில் உள்ள சுமார் 600 ஈழத்து தமிழ் ஏதிலிகள் சென்னை, எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
குடியுரிமை வழங்க வேண்டும், இந்தியாவில் அதிக காலம் தங்கியிருப்பதற்கான அபராதத் தொகையை குறைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேசமயத்தில். ஏதிலி அந்தஸ்து தங்களது சுதந்திரத்தையும், வாழ்க்கையில் வாய்ப்புகளையும் கட்டுப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோரிக்கைகள்
"எங்களது பிள்ளைகளுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. கல்லூரியில் பட்டம் பெற்றாலும், தனியார் நிறுவனங்கள் எமது பிள்ளைகளை வேலைக்கு சேர்ப்பதில்லை, அரச வேலைக்களுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது.
எங்களில் பலர் அன்றாடக் கூலி வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இதேவேளை, முகாமுக்கு வெளியே வசிக்கும் ஈழத்தமிழ் ஏதிலிகள் இந்தியாவில் அதிக காலம் இருந்தமைக்காக அபராதம் செலுத்த வேண்டும்.
பல ஏதிலிகள் தாயகம் திரும்ப அல்லது அவர்களது உறவினர்களைப் பார்க்க விரும்பினாலும், அவர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகை மிக அதிகமாக இருக்கிறது." இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத்து ஏதிலிகள் தெரிவித்துள்ளனர்.
மனு
இந்தியாவில் அதிக காலம் தங்கினால் வருடத்திற்கு தலா 3600 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
அதேசமயத்தில் வீசாவைப் பெறுவதற்கு 13,500 ரூபாவை செலுத்தவேண்டியுள்ளதாக ஏதிலியாக வாழ்ந்துவரும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் செயலாளருமான ஜி ஞானராஜா தெரிவித்தார்.
ஞானராஜா 1983 ஆம் ஆண்டு ஈழ யுத்தம் ஆரம்பமான காலப்பகுதியில் கிளிநொச்சியை விட்டு தனது பெற்றோருடன் இந்தியாவிற்கு ஏதிலியாக சென்றவர்.
33 வருடங்கள் கடந்தாலும் தமக்கும் குடும்பத்தினருக்கும் நிவாரண அட்டையோ, ஆதார் அட்டையோ வழங்கப்படவில்லை, ஈழ ஏதிலிகள் என்ற அடையாள அட்டை மட்டுமே உள்ளது என ஞானராஜா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வசிக்கும் சுமார் ஒரு லட்சம் ஏதிலிகளில் 20,000 பேர் வரையில் தாயகம் திரும்ப விரும்புவதாக ஞானராஜா ஒப்புக்கொண்டாலும், நாட்டில் உள்ள சமூக, அரசியல் நிலவரம் பலருக்கு நம்பிக்கையைத் தூண்டவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
