வல்லாதிக்க நாடுகளால் ஆக்கிரமிக்கப்படும் நிலையில் தமிழர்களின் சுதந்திர பூமி - இந்தியாவின் கரிசனை!
தென்னாசியாவின் பாதுகாப்பு கருதி ஈழத்தமிழர்களும் இந்தியாவும் இணைந்து செயற்படவேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் நாகம் இ.கதிர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் நாகம் இ.கதிர் தலைமையிலான குழுவினர் இந்தியாவின் உயர் அதிகாரிகள் பலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் இந்தியாவின் டில்லியில் நேற்றைய தினம் நடைபெற்ற தமிழருக்கான சமூகநல அறக்கட்டளையின் ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“இந்த மாநாட்டு மண்டபத்தில் முக்கியமான தகவல்களை நான் சொல்ல வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் இந்திய அரசாங்கமும் ஈழத்தமிழர்களும், ஒரு நட்புறவு சங்கமாக இணைந்து செயற்படவேண்டும்.
இந்தியாவின் அக்கறை

நீண்ட காலத்தின் பின்னர் இந்தியா தமிழர்களின் நலன் சார்ந்த விடயங்களில் ஒரு நம்பகத்தன்மையான செயற்பாடுகளில் ஈடுபடுவதை எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்திய இலங்கை ஒப்பதந்தத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை அதிகாரம், காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற செய்தியினை அண்மையில் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார். இது மகிழ்ச்சிகரமான சம்பவமாக அமைந்துள்ளது.
உரிமைக்காக போராடும் இனம்

அடிப்படை தீர்வும் இன்றி நிதந்தர தீர்வும் இன்றி அவல நிலைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழினம் தமது உரிமைக்காக போராடுகின்ற இனமாகத்தான் இலங்கையில் வாழ்ந்து வருகின்றது.
சிறிலங்கா அரசாங்கம் காலம் காலமாக இந்திய அரசாங்கத்தினை இலகுவாக ஏமாற்றி வருகின்றது. இன்று தமிழர்களின் சுதந்திர பூமி வல்லாதிக்க நாடுகளால் ஆக்கிரமிக்கப்படும் சூழல் உருவாகி இருக்கின்றது. இது இந்தியாவிற்கு மிக முக்கியமான விடயமாக பார்க்கப்பட வேண்டும்” எனவும் தெரிவித்தார்.