மின்சார கட்டண திருத்தம் : யாழில் பொதுமக்களிடம் கருத்துக் கோரல்
இலங்கை மின்சார சபையினால் (CEB) முன்மொழியப்பட்ட 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோரும் நடவடிக்கை இன்று (27) யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்றது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) ஏற்பாடில் கடந்த 23 ஆம் திகதி ஆரம்பமான குறித்த கலந்துரையாடல் ஜூன் 3 ஆம் திகதி வரை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் இடம்பெறவுள்ளது.
இந்த விடயத்தினை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்திருந்தார்.
பல்துறைசார் பிரதிநிதிகள்
யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மின்சார கட்டண அதிகரிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து பல்துறைசார் தரப்பின் பிரதிநிதிகள் வலியுறுத்தியிருந்தனர்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தவிசாளர் கே.பி.எல் சந்திரலால், பிரதிப் பணிப்பாளர் நாயகம் நிலந்த சப்புமானகே, பொதுபயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க உள்ளிட்ட பிரதானிகள் பிரசன்னத்துடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
