சிறிலங்காவிற்கான வெளிநாட்டுத் தூதுவர்கள் மலையகத்திற்கு சுற்றுலாப் பயணம்
சிறிலங்காவிற்கான வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் புதுடில்லியில் இருந்து கடமையாற்றும் 09 வெளிநாட்டுத் தூதுவர்களும் மலையகத்திற்கு சுற்றுலாப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
எல்ல ஒடிஸி என்ற விசேட நட்புறவு சுற்றுப்பயணம் வெளிவிவகார அமைச்சு, அதிபர் செயலகம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் என்பவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எல்ல ஒடிஸி சுற்றுலா பயணம்

இலங்கையின் சுதந்திரம் மற்றும் இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த எல்ல ஒடிஸி சுற்றுலா பயணம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
சர்வதேச சமூகத்துடனான இலங்கையின் நீடித்த உறவை பிரதிபலிக்கும் வகையில் இந்த பயணம் 01 ஆம் திகதி முதல் 03 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டது.
காலனித்துவ காலத்தை நினைவுகூறும் விசேட தொடருந்தான வைஸ் ரொயிஸில் தூதுக்குழுவினர் பயணம் செய்தனர்.
குறித்த இராஜதந்திரக் குழுவினர் கண்டியில் இருந்து தமது பயணத்தை ஆரம்பித்ததுடன், நக்கிள்ஸ் மலைத்தொடர் மற்றும் இலங்கையின் உயரமான தொடருந்து நிலையமான பட்டிபொலவையும் பார்வையிட்டனர்.

அத்துடன் ஆரம்ப காலத்தில் பயன்படுத்தப்பட்ட தொடருந்து சமிக்ஞை செயல்முறை மற்றும் இலங்கை தொடருந்து சேவையில் தற்போது பின்பற்றப்படும் சமிக்ஞை கட்டமைப்பு முறையையும் பார்வையிட்டனர்.
மேலும், 20 ஆம் நூற்றாண்டை பிரதிபலிக்கும் எல்ல ஒன்பது வளைவுகள் பாலம் மற்றும் தெமோதர தொடருந்து வளைவு ஆகியவற்றையும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கண்டு களித்தனர்.
அத்துடன் நுவரெலியா அதிபர் இல்லத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோரையும் குறித்த தூதூவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.










நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 6 மணி நேரம் முன்