இரண்டாம் தவணைக்குரிய அரச தலைவராக இமானுவேல் மக்ரன் மீண்டும் பதவியேற்பு
பிரான்சில் இரண்டாம் தவணைக்குரிய அரச தலைவராக இன்று இமானுவேல் மக்ரன் மீண்டும் பதவியேற்றுள்ளார்.
குறைந்தளவு நெறிமுறைகளுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், தனது இரண்டாம் தவணை ஆட்சியில் பிரான்சை இன்றும் வலுவான நாடாக மாற்ற உழைக்கப்போவதாக உறுதியளித்திருந்தார்.
பிரெஞ்சு அரச தலைவர் தேர்தலுக்கு கடந்த மாதம் 24 திகதியன்று நடத்தப்பட்ட இரண்டாம் சுற்று வாக்களிப்பின் ஊடாக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட மக்ரன், தற்போது அந்தப்பொறுப்பில் இருந்தாலும் மீண்டும் ஒரு முறை அதிகாரபூர்வமாக பிரெஞ்சு குடியரசுத் தலைவராக பதவியேற்கவேண்டிய நியதியின் அடிப்படையில் இன்று பதவியேற்பு விழா இடம்பெற்றிருந்தது.
இமானுவல் மக்ரனின இரண்டாம் தவணை ஆட்சி அதிகாரபூர்வமாக எதிர்வரும் மே 14 ஆம் திகதி நள்ளிரவில் இருந்து ஆரம்பமாகும் என பிரான்சின் அரசியலமைப்பு பேரவை அறிவித்துள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட மிகவும் குறைந்த பட்ச நடைமுறைகளுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பதவிப் பிரமாணத்துக்குரிய மதிப்பளிப்பு ஆரம் மக்ரனுக்கு வழங்கப்பட்ட பின்னர் அவர் உரையாற்றியிருந்தார்.
அவரது உரையில் தனது இரண்டாம் தவணை ஆட்சியில் பிரான்சை இன்றும் வலுவான நாடாக மாற்ற உழைக்கப்போவதாக உறுதியளித்திருந்தார்.
பின்னர் இமானுவேல் மக்ரன் படை மரியாதையுடன் 21 பீரங்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டு மதிப்பளிப்பு வழங்கப்பட்டிருந்தது.
முன்னாள் அரச தலைவர்களான நிக்கோலா சார்க்கோசி மற்றும் பிரான்சுவா ஹொலண்ட் உட்பட 450 விருந்தினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.