பல்கலை மாணவனின் மரணம்: சட்டத்தரணிகள் சங்கத்தின் தீவிர நடவடிக்கை!
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர் சரித் தில்ஷானின் தற்கொலையைத் தொடர்ந்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் (FR) மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
அதில் பல்கலைக்கழக நிர்வாகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் பகிடிவதை எதிர்ப்புச் சட்டங்களை நடைமுறைப்படுத்தவும் மாணவர்களை பாதுகாக்கவும் தவிறியுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
புதிய திட்டம்
இவ்வாறான தோல்விகள் சித்திரவதையிலிருந்து விடுதலை மற்றும் சட்டத்தின் சமமான பாதுகாப்பு தொடர்பான பிரிவுகள் 11 மற்றும் 12(1) இன் கீழ் மாணவரின் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரச கல்வி நிறுவனங்களில் பகிடிவதையை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு திட்டத்தை வகுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
பிரதிவாதிகள்
இந்த மனு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய மற்றும் செயலாளர் சதுர கல்ஹேன ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சப்ரகமுவ பல்கலைக்கழகம், அதன் துணைவேந்தர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், உயர் அமைச்சின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர், பதில் காவல்துறை மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட 69 பேர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
