அநுர அரசின் அதிரடி : விரைவில் கைது செய்யப்படவுள்ள உதயகம்மன்பில
அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டத்தின் கீழ், தம்மைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதயகம்மன்பில (Udaya Gammanpila) குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
இனவாதத்தைத் தூண்டும் வகையில் தாம் கருத்துக்களைத் தெரிவித்ததாக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சில தரப்பினரால் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 323 கொள்கலன்கள் விடுவிப்பு விடயத்தில் மோசடி இடம்பெறவில்லை எனத் தெரிவிப்பதற்கு, இந்த அரசாங்கம் தங்களுக்கும், ஜனாதிபதிக்கும் நெருக்கமானவர்களை உபயோகித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியுடன் ஆலோசனை
அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்வது குறித்து, ஜனாதிபதியுடன் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் ஆலோசித்துள்ளனர் என தெரிவித்தார்.
இனவாதத்தைத் தூண்டியதாக இந்த சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்தால், நீண்டகாலம் தடுத்து வைக்கலாம் என இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஜனாதிபதி ஜேர்மனிக்குச் சென்று, விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான நெடியவனை சந்திக்கவுள்ளதாகத் தாம் தெரிவித்த கருத்தினூடாக இனவாதம் தூண்டப்படுவதாக சில தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளதாக கூறினார்.
எனினும், இது, தாமாகத் தெரிவித்த கருத்து அல்லவெனவும், சமூக ஊடகங்களில் பகிரப்படும் விடயங்களையே தாம் தெரிவித்ததாகவும், அதற்கான ஆதாரங்களும் தம்மிடம் உள்ளதாகவும் உதய கம்மன்பில தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
