புலிகளின் தங்கத்தை தேடிச்சென்ற அதிரடிப் படையினருக்கு காத்திருந்த ஏமாற்றம்
விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி மட்டக்களப்பு வவுணதீவு காவல்துறை பிரிவிலுள்ள புளியடிமடு காயங்குடா பகுதியில் தனியார் காணி பகுதியில் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அகழ்வு பணியை நீதிமன்ற உத்தரவு பெற்று விசேட அதிரடிப்படையினர் இன்று திங்கட்கிழமை (29) முன்னெடுத்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் முகாம்
கல்லடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கந்த குட்டி ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான காணி பகுதியில் கடந்த காலத்தில் விடுதலைப்புலிகளின் முகாம் இருந்துள்ளது.
அந்த காலப்பகுதியில் நிலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை புதைத்து மறைத்து வைத்துள்ளதை அகழ்ந்து எடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற உத்தரவு பெற்று மண் அகழ்வும் இயந்திரமான (பக்கோ இயந்திரம்) மூலம் அகழும் நடவடிக்கையை இன்று முன்னெடுத்தனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு ஏமாற்றம்
இதன் போது வவுணதீவு காவல்நிலைய பொறுப்பதிகாரி கல்லடி விசேட அதிரடிப்படை பொறுப்பாளர், கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டு அகழ்வு பணியை காலை 9 மணி தொடக்கம் பகல் 1.00 மணி வரை மேற்கொண்ட போதும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதையடுத்து அழ்வு பணி நிறுத்தப்பட்டு முடிவுக்கு கொண்டுவந்து அங்கிருந்து விசேட அதிரடிப்படையினர் வெளியேறினர்.
இதேவேளை, குறித்த பகுதி கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளதுடன் அங்கு அந்த நேரம் புலிகளின் முகாம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
