அமெரிக்காவில் மிக நவீன போர் விமானம் மாயம்
அமெரிக்காவில் மிக நவீன போர் விமானம்(எஃப்-35 வகை) ஒன்று காணாமல் போயுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை(18) பிற்பகல்வேளை தெற்கு கரோலினா மாகாணத்துக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது விமானம் காணாமல் போனது.
தேடுதல் வேட்டை
கடைசியாக விமானம் பறந்த இடத்தைப் பற்றிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மௌல்ட்ரி ஏரி, மரியான் ஏரி ஆகியவற்றில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறு அமெரிக்க இராணுவம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
பாரசூட் உதவியுடன் குதித்த விமானி, மருத்துவமனையில் நலமாக உள்ளார்.
இதனிடையே, மாயமான விமானத்துடன் பறந்ததாகக் கருதப்படும் இரண்டாவது எஃப்-35 ஜெட் விமானம் சார்லஸ்டனில் உள்ள தளத்திற்கு பாதுகாப்பாக திரும்பியது என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜ் மெலனி சலினாஸ் உறுதி செய்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய ஆயுதத் திட்டம்
இந்த விமானம் இது லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. ஒவ்வொன்றும் சுமார் 650 கோடி(இந்திய மதிப்பில்) ரூபாய் மதிப்பு கொண்டது.
எஃப்-35 என்பது உலகின் மிகப்பெரிய, அதிகப் பொருட் செலவிலான ஆயுதத் திட்டமாகும்.
2018 ஆம் ஆண்டில், தென் கரோலினாவில் இடம்பெற்ற விபத்தின் பின், அமெரிக்க இராணுவம் அதன் முழு எஃப்-35 போர் விமானங்களையும் பறப்பதில் இருந்து தற்காலிகமாக நிறுத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
