வார்த்தையை விட்டு சிக்கிய விமல் வீரவன்ச! நலிந்த வைத்த செக்
தன்னைக் குறித்து பொய்யான மற்றும் அவதூறான தகவல்களை பரப்பியதாகக் கூறி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிடமிருந்து தலா ரூ.1 பில்லியன் இழப்பீடு கோரி அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ சட்ட கடிதம் அனுப்ப தனது சட்டத்தரணிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், 2026 பெப்ரவரி 6ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பதிவு செய்யப்படாத மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரின் கடன் அட்டையை பயன்படுத்தி, இந்தியாவில் சுமார் ரூ.10 இலட்சம் மதிப்புள்ள பொருட்களை அமைச்சர் ஜயதிஸ்ஸ வாங்கியதாக விமல் வீரவன்ச கூறியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொய்யான குற்றச்சாட்டு
இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது, ஆதாரமற்றது மற்றும் தீய நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டதாகவும், அமைச்சரின் நற்பெயரை சேதப்படுத்தவும், பொதுமக்களிடையே அவர்மீது உள்ள நம்பிக்கையை குலைக்கவும் இதைச் செய்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2026 பெப்ரவரி 7ஆம் திகதி மாலை 6.50 மணிக்கு சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி தனது பிரதான செய்தி ஒளிபரப்பில், இந்த குற்றச்சாட்டை ஒளிபரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையை அமைச்சர் ஜயதிஸ்ஸவிடம் உறுதிப்படுத்தாமலும், அவருக்கு பதிலளிக்க வாய்ப்பு வழங்காமலும் செய்தி ஒளிபரப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நற்பெயருக்கு சேதம்
அத்துடன், இந்த செய்தி பின்னர் இணைய தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு பரவியதால், அமைச்சரின் நற்பெயருக்கு ஏற்பட்ட சேதம் மேலும் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் ஜயதிஸ்ஸ தனது சட்டத்தரணிகள் மூலம், விமல் வீரவன்சவிடமிருந்தும், தொடர்புடைய தொலைக்காட்சியை இயக்கும் நிறுவனங்களிடமிருந்தும் தலா ரூ.1 பில்லியன் இழப்பீடு கோரி சட்டக் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த இழப்பீடு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அந்த சட்ட கடிதங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரின் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |