நல்லூர் வருடாந்த உற்சவம் தொடர்பில் பொய்யான பரப்புரை -மாநகர உறுப்பினர் கடும் கண்டனம்
நல்லூர் வருடாந்த உற்சவம் -பொய்யான பரப்புரை
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய உற்வசம் இம்முறை சிறப்பாக இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் உற்சவம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் யாழ். மாநகர பிரதி முதல்வர் து.ஈசன் என்பவருக்கெதிராக யாழ். மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் சபையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று(12) இடம்பெற்றுள்ளது. இதன்போதே அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
“கடந்த 2020 ஆம் ஆண்டு ஆனோல்ட், மாநகர முதல்வராக இருந்தார். அவர் நல்லூர் பெருந்திருவிழா காலத்தில் வெளிநாடு ஒன்றுக்கு பயணமானதால் மாநகரத்தின் பதில் முதல்வராக பிரதி முதல்வர் து.ஈசன் பதவி வகித்தார். அப்பொழுது (2020 ஆண்டு) நல்லூர் கந்தன் கோவில் திருவிழா தொடர்பில் ஊடக சந்திப்பு ஒன்றினை செய்திருந்தார். இதற்கமைய ஊடக சந்திப்பில் கொவிட் தொற்றுக் காரணமாக காவடிகள் அங்க பிரதட்சணை உட்பட எந்த ஒரு நேர்த்திக்கடன்களையும் பக்கதர்கள் செய்ய முடியாது அன்னதானம் வழங்க முடியாது என்று கூறியிருந்தார்.
2020 ஆண்டு நடத்திய குறித்த செய்தியாளர் மாநாட்டின் காணொளியினை இம்முறை நல்லூர் திருவிழா காலத்தில் தன்னுடைய முகப் புத்தகம் வாயிலாக வெளியிட்டு மக்களிடத்தில் ஒரு குழப்பநிலையை உருவாக்கியுள்ளார்.
உண்மைக்கு புறம்பான கருத்துக்கள்
அது மட்டுமன்றி கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த பிரதி முதல்வர், 2020 ஆண்டு நான் பதில் முதல்வராக இருந்த காலத்தில் கொவிட் தொற்றுக் காரணமாக நல்லூர் கந்தன் ஆலயத்திருவிழா நடைபெறுமா இல்லையா என்று கேள்விக்குறியாக இருந்தது. இதன்போது அதிபர் செயலகம் மற்றும் சுகாதார அமைச்சு போன்ற மட்டங்களுக்கு கடிதங்களை அனுப்பி 50 பேர் மட்டும் தான் உட்செல்வதற்கு இருந்த அனுமதியினை அதிகரித்து அந்த உற்சவத்தை நடத்தியிருந்தோம் என்று உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பொறுப்பற்ற முறையில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2021 ஆம் ஆண்டு நல்லைக் கந்தன் வெளி வீதி வருவதற்கு தற்போதைய முதல்வர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். ஆனால் நல்லூர் கந்தப் பெருமான் வெளிவீதி வருவதற்கும் மாநகர முதல்வருக்கும் என்ன சம்மந்தம் இருக்கின்றது. அந்த புரிதல் கூட இல்லாமல் ஒரு மாநகரத்தின் பிரதி முதல்வர் செயற்படுவது நகைப்பிற்குரியது.
2020 ஆண்டு திருவிழா தன்னால் தான் நடந்தது போன்றும் 2021 ஆண்டு திருவிழா நடைபெறுவதற்கு தற்போதைய முதல்வர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று சிறுபிள்ளைத்தனமாக பொய்யான விடயங்களினை ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.
சைவத்தமிழ் மக்களின் அடையாளம்
நல்லூர் கந்தசுவாமி கோவில் சைவத்தமிழ் மக்களின் அடையாளம் என்பதனையும் தாண்டி அது யாழ்ப்பாணத்தின் அடையாளமாக எல்லோராலும் பார்க்கப்படுகின்ற நிலையில் நல்லைக் கந்தன் உற்சவத்திற்கு யாழ். மாநகர சபை செய்கின்ற பணி வருமானத்தினை கருத்திற் கொண்டானது அல்ல.அது வரலாற்று ரீதியான தெய்வீகப் பணி.
எனவே அப்பணி தொடர்பில் தனக்கிருக்கின்ற ஆர்வகோளாறினால் இவ்வாறு சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை ஊடங்களுக்கு வழங்குவதனை கண்டிப்பதோடு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகின்றேன்” என தெரிவித்துள்ளார்.
