மனைவியை மிரட்ட மகனின் கழுத்தில் கத்தி வைத்த தந்தை..!
வெளிநாட்டில் தொழில் புரியும் தனது மனைவியை உடனடியாக நாடு திரும்புமாறு வற்புறுத்தி தனது ஐந்து வயது மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்து வற்புறுத்திய நபரொருவர் குளியாப்பிட்டிய காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தனது ஐந்து வயது மகனின் கழுத்தில் கூரிய ஆயுதத்தை வைத்து காணொளி எடுத்து மனைவி மற்றும் வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த காணொளியை வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் பெற்றுக் கொண்டதன் பேரில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் குளியாப்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
கழுத்தில் கத்தியை அழுத்தியதில் காயங்களுக்கு உள்ளான குழந்தை குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தன்னை தனது பாட்டியுடன் வாழ அனுமதிக்குமாறும், தன்னை கொடுமைப்படுத்திய தந்தையிடம் ஒப்படைக்க வேண்டாம் என்றும் குழந்தை காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, குறித்த சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.