கட்டுநாயக்காவில் கைதான பெண் சுகாதார உதவியாளர் - பின்னணியில் அதிர்ச்சி தகவல்
கட்டுநாயக்க காவல்துறை குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சுகாதார உதவியாளராக கடமையாற்றும் பெண்ணொருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹெரோயின் போதைப்பொருளை பொட்டலங்கலாக வைத்திருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலனறுவையைச் சேர்ந்த 38 வயதான குறித்த பெண், தற்போது கட்டுநாயக்க பிரதேசத்தில் வசித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஹெரோயின் சுற்றப்பட்ட பொட்டலங்கள்
ஹெரோயின் தனித்தனியாக சுற்றப்பட்டு, சிறிய பொட்டலங்களில் அழகுசாதனப் பொருட்களுடன், மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவரிடமிருந்து இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான 05 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
காரில் வந்த நபருக்கு வழங்க தயாரான பெண்
சந்தேகநபர் நேற்று (1) கட்டுநாயக்க பிரதேசத்தில் காரில் வந்த நபருக்கு ஹெரோயின் அடங்கிய தைலப் பொதியை வழங்க முற்பட்ட வேளையில் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கட்டுநாயக்க காவல்துறை குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இந்த பெண்ணை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.