சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் எங்கே..! சர்வதேச சமூகத்திற்கு முக்கிய செய்தி
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்ததின் போது சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் மற்றும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்களின் விரிவான பட்டியலை வெளியிடுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
அதேநேரம் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தந்திரோபாயங்கள் குறித்து சர்வதேச சமூகத்தினர் அவதானமாகச் செயற்பட வேண்டுமெனவும் பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற யுத்தத்தின் இறுதிக் கால கட்டத்தில் சுமார் 18,000 தமிழர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதுடன் சரணடைந்ததாகவும் பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத் தலைவர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் வேண்டுகோளின் பேரில் அவர்கள் சரணடைந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் சரணடைந்தவர்களில் ஒருவர் கூட இன்றுவரை உயிருடன் திரும்பவில்லை எனவும் அவர்களின் உண்மையான நிலை இன்று வரை தெரியவில்லை எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
| இலங்கையை சர்வதேச குற்றவியல் கூண்டில் நிறுத்து - அமெரிக்காவில் தீவிர முனைப்பு |
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்திருக்கும்

சிறிலங்காவின் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறிவித்திருந்தார் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச சமூகம் சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க வேண்டுமென பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
நாட்டின் அதிபர் என்ற வகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்திருக்கும் என்பதை ரணில் விக்ரமசிங்க முழுமையாக அறிந்திருப்பர் எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காகவே அண்மையில் சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீது விதிக்கப்பட்ட தடையை சிறிலங்கா அதிபர் நீக்கியதாகவும் பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்ட அறிக்கை