கோட்டாபயவை ஆட்டி படைக்கும் பசில்: பதவி பறிப்பிற்குப் பின்னர் பல தகவல்களை அம்பலப்படுத்திய விமல்
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தான் விரும்பியவாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை ஆட்டி படைத்து வருவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, அத்துரலியே ரதன தேரர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் அதில் இருந்து எப்படி மீண்டு வருவது என்பது பற்றியே பேசினேன்.
இடையில் பசில் ராஜபக்சவின் செயற்பாடுகளை விமர்சித்து இருந்தேன். இதனையடுத்து நாங்கள் அமைச்சர்களாக பதவி வகித்தால், அமைச்சரவைக் கூட்டங்களுக்கு வரபோவதில்லை என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, கோட்டாபயவிடம் கூறியதாக எமக்கு தகவல் கிடைத்தது.
இதன் காரணமாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வழமை போல் தனது குடும்பத்தினரின் சொற்படி, தனது சகோதரர், அமைச்சரவைக் கூட்டங்களுக்கு வருவதற்காக எங்களை அமைச்சு பதவிகளில் இருந்து நீக்க தீர்மானித்துள்ளார்.
பசில் ராஜபக்சவை பற்றி நான் அறிந்தது, அதனை பச்சையாக கூறாது சற்று அவித்து வேக வைத்து அந்த மாநாட்டில் கூறியிருந்தேன். தற்போது பச்சையாக கூற முடியும். அவித்து கூறியதும் காரமாக இருந்து என்று தானே கூறுகிறார்கள்.
பசில் ராஜபக்சவுக்கு ஒரு ஒப்பந்தம் இருக்கின்றது. அவர் தனது ஓய்வுகாலத்தை அமெரிக்காவில் கழிப்பார்.
அங்குதான் அவருடைய சொத்துக்கள் இருக்கின்றன. பணச் சலவை குற்றச்சாட்டில் எந்த நேரத்திலும் அமெரிக்காவால் பசில் ராஜபக்சவை கைது செய்ய முடியும். ஏன் அது நடக்காமல் இருக்கின்றது. அதற்கு என்ன காரணம். அமெரிக்காவுக்காக அவர் சேவையாற்றுகிறார்.
நாட்டின் பொருளாதார பிரச்சினையை மிக மோசமான அனர்த்தமாக மாற இடமளித்து, இந்தோனேசியாவில் போன்ற மக்களின் மன நிலையில் மாற்றங்கள் ஏற்பட இடமளித்து, அமெரிக்காவின் தந்திரமான வழிமுறைக்கு நாட்டை சிக்க வைப்பதே பசில் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தம்.
அவர் அந்த நோக்கத்திற்கு அமையவே செயற்பட்டு வருகிறார். இதனால், அழகற்ற அமெரிக்க பிரஜை, தனது ஓய்வுகாலத்தை அமெரிக்காவில் தனது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும்.
அமெரிக்காவில் சுகமாக ஓய்வுகாலத்தை கழிக்க வேண்டுமாயின் இங்கு காட்டிக்கொடுப்பை செய்ய வேண்டும். இங்கு காட்டிக்கொடுக்காமல், அங்கு மகிழ்ச்சியாக ஓய்வுகாலத்தை கழிக்க முடியாது.
அப்படியில்லை என்ற பணச் சலவை குற்றத்தில் சிக்குவதை தவிர்க்க முடியாது. இதுதான் உண்மையான கதை. இப்படியான மனிதனின் தனிப்பட்ட வில்லத்தனத்திற்கு நாட்டை பழிக்கொடுக்க இடமளிக்க முடியாது இது தொடர்பில் எமக்கு கவலையோ, கோட்டாபய மீது கோபமே இல்லை.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச என்பவரால், தான் விரும்பியவாறு ஆட்டி வைக்கப்படும் பாத்திரம்.
பசில் ராஜபக்ச என்பவர், சிறிலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியின் உரிமையை தனது கையில் வைத்துக்கொண்டு செயற்பட்டு வருகிறார்.
அந்த கட்சியில் இருக்கும் பொருளாளர், செயலாளர் பதவிகளில் இருப்பவர்களின் பெயர்கள் கூட எமக்கு தெரியாது. ஆரம்பத்தில் கட்சி சிறப்பாக செயற்பட்டது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்படவிருந்த நேரத்தில் பொதுஜன பெரமுன என்ற கட்சியில் தேர்தலில் போட்டியிட்ட பின்னர், அந்த சட்டப் பிரச்சினை முடிவுக்கு வந்தது.
அதற்கு பின்னரும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் பதவியில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எவரும் நியமிக்கப்படவில்லை. சாகர காரியவசம் என்பவர் செயலாளராக இருக்கின்றார்.
இது வித்தியாசமான கட்சி. அந்த கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்ச இருப்பது போல் செயலாளராக டளஸ் அழகப்பெரும போன்ற பதவி வகித்திருக்க வேண்டும்.
எனினும் அந்த கட்சியில் அப்படி நடக்கவில்லை. அந்த கட்சி முற்றிலும் தனிப்பட்ட சொத்து. அந்த சொத்தில் இருக்கும் பலத்தை பயன்படுத்தி தாம் விரும்பியது போல் முடிவுகளை எடுக்க அரச தலைவர் கட்டாயப்படுத்தப்படுகிறார் என்பது கவலைக்குரிய விடயம். அரச தலைவரினாலும் அந்த அழுத்தங்களில் இருந்து விடுப்பட முடியாமல் போயுள்ளது.
நான் வகித்த அமைச்சராக பதவி வகித்த துறையுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன். உதய கம்மன்பில அப்படியே செயற்பட்டார்.
அந்த விடயத்தில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். பதவிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எமது அரசியல் வழமை போலவே இருக்கும். நாங்கள் மக்கள் ஆணைக்கு ஏற்ப செயற்பட்டு வந்தோம். மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளுக்கு எதிராக செயற்படும் போது நாங்கள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டுள்ளோம்.
அதேபோல் மக்கள் ஆணையை பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக எங்களை அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கி இருந்தால், நாங்கள் அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறோம் என விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.