தமிழர் தரப்பின் நகர்வுகள் சாதாரணமானவை அல்ல!! அரசாங்கத்திற்கு ஆலோசனை
தமிழர் தரப்பின் பிரச்சினைகளை செவிமடுத்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாச (Rohana Luxman Piyadasa) கூறியுள்ளார்.
இலங்கையின் அரசியல் முரண்பாடுகள் குறித்து கருத்து வெளியிட்ட அவர், இனியும் தவறான கொள்கையில் அரசாங்கம் பயணித்தால் ஒட்டுமொத்த நாடும் அதளபாதாளத்தில் விழும் எனக் கூறியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் மற்றும் 1987 ஆம் ஆண்டு வாக்குறுதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழர் தரப்பு வலியுறுத்தியுள்ளமை, வழமை போன்ற செயற்பாடாக இருந்தாலும் இப்போது இதனை சாதாரணமாக கருத முடியாது.
பூகோள அரசியல் போட்டியில் இலங்கை சிக்கிக்கொண்டுள்ளது. இதில் தமிழர் தரப்பின் நகர்வுகள் அவதானிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
வெவ்வேறு நாடுகளுடன் நாம் பகுதி பகுதியாக இணைய நினைப்பது ஆரோக்கியமான விடயமாக இருக்காது. நாடாக ஒரே கொள்கையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதற்காக முதலில் தேசிய மட்டத்தில் சகல தரப்பையும் ஒன்றிணைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும்” - என்றார்.
