அமெரிக்காவில் சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு..!
அமெரிக்காவில் சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் தீமைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.
அதனையடுத்து அங்குள்ள உட்டா மாகாணத்தில் முதன்முதலாக சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டது.
குறித்த சட்டத்திற்கு ஆளுநர் ஸ்பென்சர் காக்ஸ் ஒப்புதல் அளித்தார்.
பெற்றோர் அவசியம் சம்மதிக்க வேண்டும்
இந்த சட்டத்தின்படி 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை வைத்திருக்க அவர்களது பெற்றோர் அவசியம் சம்மதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது
மேலும் அவர்களது கணக்கை பெற்றோர் முழுவதும் அணுகும் வகையில் இருக்க வேண்டும் எனவும் முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் செய்திகளை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் தீமைகளை குறைக்க உதவும் என பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.