யாழில் சட்டவிரோத தொழில்முறைகளை கட்டுப்படுத்த டக்ளஸ் புதிய நடவடிக்கை.
வடமராட்சி கிழக்கில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் அப்பகுதியில் உள்ள கடற்படைக் காவலரன்கள் ஊடாக கடற்படையினரின் கண்காணிப்பின் பின்னரே கடற்றொழிலுக்கு செல்ல வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்டத்தின சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத சுருக்கு வலை தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் கடற்படையோ, மாவட்ட கடற்றொழில் திணைக்களமோ உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதில்லை என வருகை தந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளினால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
குற்றச்சாட்டு

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
நூறு மீட்டர் இடைவெளியில் கடற்படை காவலரண்கள் இருக்கின்ற நிலையில் கடற்படையால் சட்டவிரோத தொழில் முறையை கட்டுப்படுத்த முடியாதது ஏன்? என கேள்வி எழுப்பினர்.
தாங்கள் அறிந்த வரையில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு கடற்படை இலஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில் நீரியல் வளத் திணைக்களமும் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுபவர்களை கைது செய்வதில் அலட்சியமாக இருப்பதாக கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பிரதிநிதிகள்

கடற்றொழிலை நம்பி இருக்கும் வடமாராட்சி கிழக்கு மீனவர்கள் சட்ட விரோத சுருக்குவலை தொழிலில் ஈடுபடுபவர்களால் தமது வாழ்வாதாரமே பறிபோகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நீங்கள் அமைச்சராக இருக்கும்போதே வாழ்வாதாரமின்றி மீனவ குடும்பங்கள் செத்துப் போகும் நிலையை நீங்கள் பார்க்கப் போகிறீர்களா என அமைச்சர் முன் கேள்வி எழுப்பினர்.
அமைச்சர் டக்ளஸ்

கருத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
கடற்படை அனுமதி பெற்று மீன் பிடிக்கச் செல்லும் முறைமையை மக்களின் கோரிக்கைக்கு அமையவே தளர்த்தினோம்.
ஆனால் இன்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் நிலை வந்துள்ள காரணத்தினால் இதனை ஒரு பகுதியினூடாக ஒழுங்குபடுத்த வேண்டும்.
ஆகவே (இன்று) வியாழக்கிழமையிலிருந்து வடமராட்சி கிழக்கில் உள்ள அனைத்து மீனவத் தொழிலாளர்களும் கடலுக்குச் செல்லும் போது அப்பகுதியில் உள்ள கடற்படை முகாம்களில் உரிய அனுமதிகளை காண்பித்து கடலுக்குச் செல்ல வேண்டும் என பணிப்புரை விடுத்தார்.
இந்த நடைமுறையையில் சாதக பாதங்களை அறியும் வரை குறித்த செயற்பாட்டை பின்பற்றுமாறு அமைச்சர் பணிபுரை விடுத்ததோடு, வடமராட்சி கிழக்கில் உள்ள சமாசங்கள், சங்கங்களுடன் கலந்துரையாடி அப்பகுதி ஊடாக செல்ல வேண்டும் என்பதை கடற்படையினருக்கு பெயர்களை வழங்குமாறு தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில்

வட மாகாண கடற்படை தளபதி, வட மாகாணத்தின் உயர் காவல்துறை அதிகாரிகள், யாழ் 551 பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரி, பிரதேச செயலாளர்கள் காவல்துறை நிலையங்களின் பொறுப்பு அதிகாரிகள், மற்றும் திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அதேவேளை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பான முன்னேற்றங்கள் தொடர்பாகவும் குறித்த கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இதேவேளை, காவல்துறையின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்த பிரதேச செயலாளர்கள், இன்னும் காவல்துறை மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்படுமாயின் போதைப் பொருள் பாவனை மற்றும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.