மட்டக்களப்பில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை பறிப்பதற்கு எதிராக கண்டனம்!
கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழில் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களை பிரதேச சபைக்கு வழங்கும் வேலையில் சிலர் ஈடுபட்டு வரும் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக கடற்றொழில் சங்கத்தின் தலைவர் ரத்தினம்பத்மநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (23.10.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதேஅவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு கடற்றொழில் தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடற்றொழிலாளர்களுக்கு வருமானம்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “பாலமீன்மடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள 300 படகுகளுக்கு மேற்பட்ட படகுகள் பயன்பெற்று வருகின்றன.

அதேபோல் களுவங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் அந்த பகுதி படகுகளை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் நன்மையடைந்து வருகின்றனர்.
இதனை தனிநபர் ஒருவருக்கு குத்தகைக்கு கொடுத்து அதில் வரும் வருவாயில் கடற்றொழில் குடும்பத்தில் ஒருவர் உயிரிழந்தால் மரண செலவுக்கு பணம் வழங்கி வருகின்றோம் அதுமட்டுமல்ல பாடசாலை மற்றும் விளையாட்டு கழகங்களின் வளர்ச்சிக்காக பணம் வழங்கி வருகின்றோம்.
இவ்வாறான நிலையில் , கடற்றொழில் சங்கத்துக்கு வருவாயாக வரும் இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை பறித்து கடற்றொழிலாளர்களின் வயிற்றில் அடித்து பிரதேச சபைக்கு வழங்குவதற்கு சிலர் நாசகார வேலை செய்துவரும் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்.
மத்திய அரசில் இருந்து வழங்கப்பட்ட இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எங்கள் கையில் இருந்து பறிபோகுமாக இருந்தால் நாங்கள் கிழக்கு மாகாணம் மட்டுமல்ல வடக்கு மாகாண கடற்றொழில் சங்கமும் ஒன்றிணைந்து பாரிய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |