வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட தந்தை செல்வாவின் 128வது ஜனன தின நிகழ்வு
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 128வது ஜனன தினம் வடக்கு கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு இன்று(31.03.2026) இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் யாழ், மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தந்தை செல்வா ஞாபகார்த்த நினைவிடங்களில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம்
இந்தநிலையில், யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் உருவ சிலைக்கு இன்று (30.03.2026) மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்நிகழ்வில், தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.


மட்டக்களப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 128வது ஜனனதினம் இன்று(31) செவ்வாய்கிழமை மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா ஞாபகார்த்த பூங்காவில் இந் நிகழ்வு நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு கிளை தலைவரும் முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான, ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி சிறிநாத் மற்றும் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையில் விரிவுரையாளர். நடராசா புஸ்பராசா, தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னாரது நினைவு தூபிக்கு சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.





செய்தி - பவன்
திருகோணமலை
தந்தை செல்வாவின் 128வது பிறந்த தினத்தினை நினைவுகோரும் வகையிலான நிகழ்வு இன்று (31) திருகோணமலையில் அனுஷ்டிக்கப்பட்டது.
திருகோணமலை சிவன் கோயிலுக்கு அருகிலுள்ள தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட கிளைத்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.குகதாசன் தலைமையில் இடம்பெற்றது.
அத்துடன் இந்நிகழ்வில் கட்சியின் திருகோணமலை மானகர முதல்வர் எஸ்.செல்வராஜா, பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வெள்ளத்தம்பி சுரேஸ் குமார் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதிக் கிளை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்தி தொம்சன்

மன்னார்
ஜே. வி. செல்வநாயகத்தின் 128வது பிறந்தநாள் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (31)மன்னாரில் நினைவு கூறப்பட்டது.

மன்னார் பஜார் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலையடியில் இடம் பெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை உறுப்பினர்கள்,கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக கட்சியின் மன்னார் நகர சபை உறுப்பினர் அன்ரனி டேவிட்சன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது அன்னாரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
செய்தி - நயன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்