வெளிநாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்காவில் கைது
தமது உடலில் கொக்கெய்ன் போதைப்பொருளை மறைத்து வைத்து நாட்டுக்குள் கொண்டு வந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், இன்று (12) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருள் தொகையின் பெறுமதி சுமார் ஒரு கோடியே 23 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உகண்டா நாட்டைச்சேர்ந்த பெண்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் உகண்டா நாட்டைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது. இவர் உகண்டாவின் கம்பாலா நகரிலிருந்து புறப்பட்டு, கட்டார் நாட்டின் தோஹாவை வந்தடைந்து, அங்கிருந்து விமானம் மூலம் இன்று காலை 9.30 மணிக்கு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இவர் சிக்கியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையிடம் ஒப்படைப்பு
சந்தேகநபரான பெண்ணை முழுமையான சோதனைக்கு உட்படுத்திய போது, அவர் தனது உடலில் 21 மாத்திரைகளாக மறைத்து வைத்திருந்த 274 கிராம் கொக்கெய்ன் கண்டறியப்பட்டது. மேலும், அப்பெண் மாத்திரைகள் வடிவில் மற்றொரு தொகுதி கொக்கைனைத் தயாரித்து விழுங்கியிருக்கலாம் என சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண் மேலதிக வைத்திய சிகிச்சை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |