அதிர வைக்கும் சம்பவம்..! சுட்டுக் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் தலைவர் கடாபியின் மகன்
லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி முஅம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி (Saif al-Islam Gaddafi) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.
இந்தத் தகவலை அவரது அரசியல் குழுவின் தலைவர் மற்றும் லிபிய செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளன.
லிபியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஜிந்தான் (Zintan) நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆயுதமேந்திய கும்பல்
1972 ஆம் ஆண்டு பிறந்த சைஃப் அல்-இஸ்லாம், தனது தந்தை முஅம்மர் கடாபியின் 42 ஆண்டு கால ஆட்சியில் மிகவும் செல்வாக்கு மிக்க நபராகத் திகழ்ந்தார்.

லண்டன் ஸ்கூல் ஒஃப் எகனாமிக்ஸில் பயின்ற இவர், ஆரம்பகாலத்தில் லிபியாவை நவீனமயமாக்க விரும்பும் ஒரு சீர்திருத்தவாதியாக மேற்கத்திய நாடுகளால் பார்க்கப்பட்டார்.
இவ்வாறான பின்னணியில் நான்கு பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பல் ஒன்று அவரது வீட்டிற்குள் புகுந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
லிபிய தலைநகர் திரிப்போலிக்கு தென்மேற்கே சுமார் 136 கிமீ (85 மைல்) தொலைவில் உள்ள ஜின்டான் நகரில் உள்ள கடாபியின் வீட்டில் ஆயுதமேந்திய நபர்கள் அவரைக் கொன்றதாக ஒத்மான் கூறியதாக லிபிய செய்தி நிறுவனமான ஃபவாசல் மீடியா தெரிவித்துள்ளது.
கோழைத்தனமான துரோக படுகொலை
கடாபியின் அரசியல் குழு பின்னர் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் "நான்கு முகமூடி அணிந்த மனிதர்கள்" அவரது வீட்டைத் தாக்கி "கோழைத்தனமான மற்றும் துரோகப் படுகொலையில்" அவரைக் கொன்றதாக குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு முன்னதாக அந்த வீட்டிலிருந்த கண்காணிப்பு கெமராக்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதேசமயம், அவர் அல்ஜீரியா எல்லையோரம் கொல்லப்பட்டதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார். எனினும், ஜிந்தான் நகரில் நடந்த மோதலில் அவர் உயிரிழந்ததாகவே பெரும்பாலான தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அவரது மறைவு, ஏற்கனவே ஆயுதமேந்திய குழுக்களால் பிளவுபட்டுள்ள லிபியாவில் மேலும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து லிபிய அதிகாரிகள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியில் நனைந்த தம்பலகாமம்…! 18 மணி நேரம் முன்