சிறிலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் CEO கபில சந்திரசேன உயிரிழப்பு: விசாரணையில் வெளியான தகவல்
🛑 புதிய இணைப்பு
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கொள்ளுப்பிட்டி, பெட்ரிஸ் பிளேஸ், எண் 38 இல் உள்ள அவரது இல்லத்தில் அவர் தவாறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. எஃப்.யு. வுட்லர் இதனை தெரிவித்துள்ளார்.
🛑 முதலாம் இணைப்பு
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்துள்ளார்.
காவல்துறை ஊடகப் பிரிவு இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளது.
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்யும் போது இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
வழக்கு விசாரணை
இந்த வழக்கு கடந்த 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சந்தேகநபரான கபில சந்திரசேன சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்னவினால் பிணைக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அந்தப் பிணைக் கோரிக்கைக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் முன்னிலையான அதிகாரிகள் அன்றைய தினம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும் இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், கடந்த ஐந்தாம் திகதி கபில சந்திரசேனவிற்கு பிணை அனுமதி வழங்கினார்.
இதையடுத்து கபில சந்திரசேனவின் பிணையை ரத்து செய்து வழக்கு விசாரணை முடியும் வரை அவரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றில் கோரிக்கை
கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திடம் குறித்த கோரிக்கையை முன்வைத்திருந்தது.
அத்தோடு கபில சந்திரசேன தனக்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளை மீறியுள்ளதாகவும் இதன் மூலம் நீதிமன்றத்தின் நம்பிக்கையைச் சீர்குலைத்துள்ளதாகவும் கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருந்தது.

எனவே அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான பிடியாணை ஒன்றையும் பிறப்பிக்குமாறு ஆணைக்குழு நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தது.
இதனடிப்படையில் கபில சந்திரசேனவைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த பின்னணியில் தற்போது அவர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |