யாழ்ப்பாணத்தில் பெண் உட்பட நால்வர் கைது
யாழ்ப்பாணம் உரும்பிராயில் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன்படி கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பொக்கணைப் பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 6 லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத கசிப்பு விற்பனை
உரும்பிராய் பொக்கனைப் பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குறித்த பெண் ஏற்கனவே பல தடவைகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும் தொடர்ச்சியாக சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்திருந்த நிலையில் இன்றைய தினம் கோப்பாய் காவல்துறையினர் 38 வயதுடைய குறித்த பெண்மணியை கைது செய்துள்ளதோடு அவரிடமிருந்து விற்பனைக்கு தயாராக இருந்த 6 லீற்றர் கசிப்பினையும் மீட்டுள்ளனர்.
பொது வெளியில் கஞ்சா நுகர்வு
இதேவேளை உரும்பிராய் சந்தி பகுதியில் பொது வெளியில் கஞ்சா நுகர்ந்த மூவர் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட மூவரும் திருநெல்வேலி மற்றும் யோகபுரம் பகுதியை சேர்ந்த 30 வயதுக்கு குறைந்தவர்கள் எனவும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து குறிப்பிட்ட அளவு கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.
