உலகமே தெரியாத இலங்கை தமிழ் பெண்ணுக்கு வாழ்வளித்த பிரான்ஸ்
வாழ்வளித்த பிரான்ஸ்
உலகமே தெரியாமல் பிரான்ஸிற்கு வந்த தன்னை பிரான்ஸ் வாழ வைத்ததாக, வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இலங்கை தமிழ் பெண்ணான ரேணுகா(Renuka) தெரிவித்துள்ளார்.
தனது வாழ்க்கைப் பயணம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
விமான நிலையத்திற்கு தன்னை அழைத்து செல்ல வருவாரா
இலங்கையில் பிறந்து வளர்ந்து, 23வது வயதில் பிரான்ஸ் வந்தேன். எனது வாழ்நாள் முழுவதையும் நான் எப்படி கழிப்பேன். பிரான்ஸ் என்னை எப்படி ஏற்றுக் கொள்ளும் என தெரியாமல் கடந்த 35 வருடங்களுக்கு முன் பாரிஸ் சார்ள்-து-கோல் விமான நிலையத்தில் கால் எடுத்து வைத்தேன்.

பிரான்ஸ் வருவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டேன். எனது கணவர் திருமணத்திற்கு பின்னர் பிரான்ஸ் வந்துவிட்டார். அவர் எங்கு இருக்கின்றார் விமான நிலையத்திற்கு தன்னை அழைத்து செல்ல வருவாரா என்பது கூட எனக்கு தெரியாது.
ஆசிரியைக்கான படிப்பை முடித்துவிட்டு, பிரெஞ்சு மொழியில் ஒரு வார்த்தையேனும் தெரியாமல் இந்த நாட்டில் எனது வாழ்க்கையை ஆரம்பித்தேன். எல்லாம் புதிதாக காணப்பட்டது. ஆரம்பத்தில் சமூக வாழ்க்கை, பொருளாதார வாழ்க்கை, குடும்பத்திலிருந்து பிரிந்திருப்பது எனக்கு எல்லாம் மிகவும் கடினமாக இருந்தது.
ஆரம்பத்தில் கடினமாக இருந்த பிரான்ஸ் வாழ்க்கை
ஆரம்பத்தில் கடினமாக இருந்த பிரான்ஸ் வாழ்க்கையை பின்னர் ஏற்றுக் கொண்டேன். பாரிஸில் வயோதிப தம்பதியை பராமரிக்கும் வேலை ஒன்றையும் ஆரம்பித்தேன். இரண்டு பிள்ளைகளுக்கு தாயானேன். எனது பிள்ளைகள் பிரான்ஸில் பிறந்து பிரெஞ்சு பிரஜைகளாகினார்கள். நான் பணியாற்றிய வீட்டில் இருந்த தம்பதி எனக்கு வழங்கிய அறிவுரைகள் அளப்பரியவை. என் வாழ்க்கையில் வெற்றி பெறவும், என் குழந்தைகளின் படிப்பில் வெற்றி பெறவும், அவர்கள் இருந்தார்கள். எல்லாக் கேள்விகளுக்கும் அவர்களிடம் பதில் இருந்தது.
இரு கலாசாரங்களுக்கு இடையில் வாழ்க்கை
வெளிநாட்டில் வசிக்கும் போது, இரு கலாசாரங்களுக்கு இடையில் வாழ்கின்றோம். அது எங்களுக்கும் குழந்தைகளுக்கும் எளிதானது அல்ல, அவர்கள் பிரான்ஸில் பிறந்தார்கள், அவர்கள் பிரான்ஸில் வளர்ந்தார்கள். ஆனால் கடுமையான போராட்டமான வாழ்க்கைகை்கு மத்தியில் பிரான்ஸ் வந்தேன். இன்று நான் ஒரு மகிழ்ச்சியான பிரான்ஸ் தாயாக வாழ்கிறேன். பிரான்ஸ் என்னை வாழ வைத்தது.

ஆரம்ப காலம் கடினமாக இருந்த போதிலும் தற்போது எங்கள் வாழ்க்கையை மாற்றும் கருவியாக பிரான்ஸ் உள்ளது. இங்கு பிரெஞ்சு மொழி தெரியாமல் இன்னமும் ஆயிரக் கணக்கான இலங்கையர்கள் உள்ளனர்.
இருந்தாலும் அவர்கள் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்ள இந்த நாடும் மக்களும் மிகப்பெரிய உதவியாக இருந்தனர்” என ரேணுகா தெரிவித்துள்ளார்.