நானோ நைட்ரஜன் திரவ உர இறக்குமதியில் பாரிய மோசடி அம்பலம்?
இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து நானோ நைட்ரிஜன் பசளை இறக்குமதியில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்ட செய்தி குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் பணித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி செயலாளர் இந்த பணிப்பை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பசளைக்கான கொடுப்பனவான 29 கோடி ரூபா பணத்தை தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு பரிமாற்றுவதற்கு அழுத்தம் விடுத்ததாக வார இறுதி பத்திரிகையொன்றில் வௌியான செய்தி முற்றிலும் பொய்யானது என ஜனாதிபதி செயலாளர் பி.பி ஜயசுந்தர (PB Jayasundara)அறிவித்துள்ளார்.
குறித்த செய்தியை அவர் முழுமையாக நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்திரிகையில் வௌியாகியுள்ள செய்தி தொடர்பில் அனைத்து தரப்பினரையும் அழைத்து பூரண விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி செயலாளர் அறிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிடமிருந்து நனோ நைட்ரஜன் யூரியா திரவ பசளை இறக்குமதியின் போது இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்(Vijitha Herath) நேற்றைய அமர்வின் போது சில விடயங்களை அம்பலப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.