நடு வீதியில் எரிபொருள் திருட்டுத்தனம் - எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை
எரிபொருள் விநியோக மோசடி
கொழும்பு பம்பலப்பிட்டியில் தனி நபர் ஒருவருக்கு கலன்களின் எரிபொருளை வழங்கிய எரிபொருள் விநியோக கொள்கலன் வண்டிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. விநியோகத்தில் ஈடுபடும் குழுவினர் நெறிமுறையற்ற தவறான வழியில் ஈடுபடுவது குறித்து இந்திய எண்ணெய் நிறுவனம் தனது கவலையை வெளியிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட விநியோக வண்டி உரிமையாளருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிறுவனம் கூறியுள்ளது.
அனுமதிப் பத்திரங்கள் உடனடி ரத்து
அதேவேளை, சட்டவிரோதமான முறையில் எரிபொருளை இறக்கியமை சம்பந்தமான சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள மூன்று சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய எண்ணெய் ஆகியவற்றின் எரிபொருளை எடுத்துச் செல்லும் மூன்று கொள்கலன் வண்டிகளின் அனுமதிப் பத்திரங்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி - தெருவில் வைத்து மருத்துவருக்கு திருட்டுத்தனமாக வழங்கப்பட்ட எரிபொருள்

