எரிபொருள் கப்பல்கள் வருவதில் உறுதியில்லை! கைவிரித்தார் அமைச்சர்
எதிர்வரும் 10 மற்றும் 15ஆம் திகதிகளுக்குள் இலங்கை வரவிருந்த பெட்ரோல் தாங்கிய கப்பல்கள், தமது வருகையை உறுதிப்படுத்தவில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், "இந்த கப்பல், வரவில்லையெனில், எதிர்வரும் 22 மற்றும் 23ஆம் திகதியன்று ஐஓசி நிறுவனத்தின் கப்பல்கள் மூலம் மாத்திரமே பெட்ரோலை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவிடம் அதிக விலைக்கு எரிபொருள்
இவ்வாறிருக்க, மலேசியாவின் நிறுவனம் ஒன்று எதிர்வரும் 13ஆம் திகதியன்று பெட்ரோலை இலங்கைக்கு எடுத்து வர இணங்கியுள்ளது.
ஆனால் அவர்களிடம் பெட்ரோலை வழமையான விலையை விட அதிக விலைக்கே கொள்வனவு செய்யப்படவுள்ளது.
எனவே அதிக விலைக்கு இந்த பெட்ரோலை கொள்வனவு செய்வதா? அல்லது 22 ஆம் திகதி ஐஓசி நிறுவனத்தின் கப்பல் வரும் வரை பெட்ரோல் இல்லாமல் இருப்பதா என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்கவேண்டும்.
இந்த கப்பலின் பெட்ரோலை கொள்வனவு செய்வதற்காக மத்திய வங்கி,டொலர் ஒதுக்கீட்டையும் செய்துள்ளது.
இந்தநிலையில் இது குறித்து நாளை மறுநாள், அமைச்சின் செயலாளரை, கோப் குழுவின் முன் அழைத்து முடிவெடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கேட்டுக்கொள்கிறேன்", எனக் குறிப்பிட்டார்.