இலங்கையில் மின் தடை ஏற்படாது : அமைச்சர் அறிவிப்பு
நாட்டில் மின்சாரத் தடையை நடைமுறைப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாகும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
செலவு குறைந்த மற்றும் நம்பகமான மின் உற்பத்தி ஆதாரங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் தற்போதைய நிலைமை முகாமைத்துவம் செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "2025-2026 ஆம் ஆண்டிற்கான நிலக்கரி கொள்வனவு செயன்முறையில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாகத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போனால், அதன் சுமையை மக்கள் மீது சுமத்தப்போவதில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெளிவுபடுத்தியுள்ளது.

ஜனாதிபதியும் இந்த நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளார். நிலக்கரி விநியோகத்தில் தவறிழைத்த நிறுவனங்களிடமிருந்து அபராதங்களை அறவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
அவ்வாறு அறவிடப்படும் தொகை போதுமானதாக இல்லையெனில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிதிச் சுமையை திறைசேரியோ அல்லது பொதுமக்களோ ஏற்கத் தயாராக இல்லை."என அவர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |