பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டில் டீசல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணங்க டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும், தற்போதைய சூழலில் பேருந்து கட்டணங்களை உயர்த்துவதற்கு அனுமதி வழங்க முடியாது என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் வழமையான கட்டணங்களிலேயே பயணங்களை மேற்கொள்ள முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
டீசல் விலை அதிகரிப்பு
இதேவேளை இலங்கையில் நேற்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றர் 407 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் லங்கா சுப்பர் டீசலின் விலை 20 ரூபாயால் உயர்த்தப்பட்டு ஒரு லீற்றர் 478 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணையாக, முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |