எரிபொருள் விலை குறைப்பு - அமைச்சர் வெளியிட்ட தகவல்
நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்ததும் அதிகரித்த எரிபொருட்களின் விலைகள் மீள குறைக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ(Johnston Fernando) தெரிவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலை வெளியேறும் வாயிலில் Lanka QR நடமாடும் செலுத்தல் செயலியை பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வரலாற்றில் டிஜிட்டல் அமைச்சு என்பது பேச்சுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. அந்தக் காலத்தில் அமைச்சு நகைச்சுவை அளிக்கும் நிறுவனமாக மாறியது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksha) இந்த அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணித்து திறந்து வைத்ததன் பின்னர் இந்த அதிவேக நெடுஞ்சாலையில் 228 மில்லியன் வாகனங்கள் பயணித்துள்ளன. மஹிந்த ராஜபக்ஷவைப் போன்று தொலைநோக்குப் பார்வையுடன் செயற்பட முன்வருமாறு முகநூலைப் பார்த்து நாட்டைக் கட்டியெழுப்ப ஆசைப்படும் ஜனாதிபதிகளிடம் , வேண்டுகோள் விடுக்கிறேன்.
மேலும், நேற்றிரவு முதல் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. அரசாங்கம் என்ற வகையில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்த நிலையிலும் கடந்த காலமாக எரிபொருள் விலை உயர்த்தப்படவில்லை. இந்த எரிபொருள் விலை உயர்வு தற்காலிகமானது என அமைச்சர் கூறியுள்ளார். எதிர்காலத்தில், நமது பொருளாதாரம் வலுவாக இருக்கும் போது, மீண்டும் எரிபொருள் விலையை குறைப்போம்.
உலகளாவிய தொற்றுநோயுடன் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியால் நாம் வெவ்வேறு முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. எரிபொருள் விலையை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி மீண்டும் வரும்போது, நாடும் அதன் மக்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அதனால்தான் முதலில் மக்களின் உயிரைக் காத்தோம். எண்ணெயால் ஏற்படும் நஷ்டத்தை மக்களுக்கு வழங்காவிட்டால், அந்த இழப்பை அரசே ஏற்க வேண்டும். அந்த இழப்பை ஈடுகட்ட மக்கள் மீது அரசு வரி விதிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் வரிச் சுமையை மக்கள்தான் சுமக்க வேண்டும். கட்டி அடித்தாலும் அடித்துக் கட்டினாலும் இரண்டும் ஒன்றுதான்.
எனவே இதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எரிபொருள் விலை அண்மைய நாட்களாக அதிகரிக்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளபோதிலும் அண்மையில் மிக குறுகிய காலத்தில் இரண்டு தடவைகள் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.