கிளிநொச்சியில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கான இழப்பீடு : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டு அலுவலகத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய 43,000 குடும்பங்களுக்கும் முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும் என ஐக்கிய மனித உரிமைகள் பேரவையினுடைய கிளிநொச்சி மாவட்ட பணிப்பாளர் B. ஜோன் பற்றிக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (04-09-2025) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த கால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த 43,000 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன.
இழப்பீட்டு கொடுப்பனவுகள்
இந்த நிலையில் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டு அலுவலகத்தினால் இந்த 43,000 குடும்பங்களில் 12,000 குடும்பங்களுக்கு மாத்திரமே இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஏனைய 31,000 குடும்பங்களுக்கும் இதுவரை இழப்பீட்டு கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை. இவ்வாறு இழப்பீட்டு அலுவலகத்தினால் மீள்குடியேறிய மக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.
இது தொடர்பாக கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாகவும், இழப்பீட்டு அலுவலகத்தினுடைய தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளதுடன் இந்த வழக்கின் இரண்டு அமர்வுகள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
