ரஷ்ய வெளியுறவு அமைச்சரால் G20 உச்சி மாநாட்டில் ஏற்பட்ட குழப்பம்!
இந்தோனேசியாவின் பாலி நகரத்தில் G20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த உச்சிமாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் கலந்து கொள்ள மறுத்ததையடுத்து, அவருக்கு பதிலாகவே ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்து கொண்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஷ்ய அமைச்சர்
இந்நிலையில் இந்தோனேசிய அரசு அதிகாரிகளை மேற்கோள் காட்டி அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி நிறுவனம், பாலியில் நடந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என தெரிவித்திருந்தது.
மேலும் இரண்டு ஆதாரங்கள் செர்ஜி லாவ்ரோவ் மருத்துவமனையில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக AP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வீடியோ அழைப்பில் பேசிய அமைச்சர்
அத்துடன் இது முழுக்க முழுக்க போலி செய்தி என்றும், ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா தனது டெலிகிராமில், தான் தற்போது அமைச்சர் லாவ்ரோவுடனேயே இருப்பதாக அறிவித்திருந்தார்.
மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியானதை தொடர்ந்து, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பாலியில் உள்ள தனது ஹோட்டல் அறையில் இருந்து வீடியோ ஒன்றில் தோன்றினார்.
ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ்-யிடம் பேசிய அவர், இது முற்றிலும் அரசியல் விளையாட்டு என தெரிவித்துள்ளார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.