நாடாளுமன்ற உறுப்பினராகும் கலகொட அத்தே ஞானசார தேரர்?
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அபே ஜாதிக பலய கட்சியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் அபே ஜாதிக பலய கட்சி தேர்தலில் போட்டியிட்டு ஓர் தேசிய பட்டியல் ஆசனத்தை வென்றெடுத்திருந்தது.
இந்த தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டிருந்த நிலையில் இறுதியாக அதுரலிய ரதன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
மூன்று மாத காலத்திற்கு மட்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க விரும்புவதாக ரதன தேரர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அவருக்கு இந்தப் பதவியை வழங்கியதாக சமன் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஆறு மாத காலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரதன தேரர் வகித்தாலும் பிரச்சினை கிடையாது என ஞானசார தேரர் தெரிவித்திருந்தார். கடந்த ஜனவரி மாதம் 5ம் திகதி ரதன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
அதுரலிய ரதன தேரர் பதவியை ராஜினாமா செய்தவுடன் ஞானசார தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அதுரலிய ரதனதேரர் எவ்வித கருத்தையும் இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.