தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை! உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு
முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் எதிர்பார்த்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் மேற்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான இந்த குற்றப்பத்திரிகைகள் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மனு விசாரணை
காலி முகத்திடல் வன்முறைச் சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னக்கோனை ஒரு சந்தேகநபராகப் பெயரிடுமாறு காவல்துறைக்கு சட்டமா அதிபர் பிறப்பித்திருந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னதாக ரத்து செய்திருந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த புதிய தகவல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
நீதியரசர்களான ஏ.எச்.எம்.டி. நவாஸ், அசல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், இந்த மேல்முறையீட்டு மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |