சூத்திரதாரிகளின் முன்னே ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரியைத் தேடும் கமன்பிலாவின் தீவிர முயற்சி...
இலங்கையின் தந்திர அரசியல்வாதி என அடையாளமிடப்படும் ரணிலை தாண்டிய அரசியல் தந்திரம் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் சில அரசியல் பிரமுகர்களால் நகர்த்தப்படுகிறது.
இன்றும் இருநாட்களில் உயிர்த்த ஞாயிறு பெருநாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள் இலங்கையின் அடையாளத்தில் படிந்த கருப்பு நாள் ஒன்றை நியாபகப்படுத்தும்.
2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நமது நாட்டில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைப்படைத் தாக்குதல்களை மறந்துவிட இயலாது.
தாக்குதல் விசாரணை
இலங்கையில் இருந்த பயங்கரவாதக் குழுவால் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் அநுர அரசாங்கம் இந்த தாக்குதல் விசாரணையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக கூறுகிறது. ஆனால் முடிவு என்பது இன்றும் தொடருகிறது.
கைதுகள், விசாரணைகள் என திடீர் தலைப்பு செய்திகளாக மட்டும் இந்த அரசாங்கத்தில் விசாரணைகள் தொடர்கின்றன. இதில் முக்கிய சூத்தரிரதாரிகளாக தற்போது பிள்ளையான், சுரேஸ் சலே கைது செய்யப்பட்டு விசாரணையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது இவ்வாறு இருக்க எதிர்கட்சி அரசியலும் ஒருபக்கம் இழுத்து செல்கிறது இந்த விசாரணைகளின் போக்கை. அது அநுர அரசாங்கத்துக்கு சவால் விடும் போக்கை அடிக்கடி எடுத்துக்காட்டுகிறது.
இதில் முக்கியமான எதிர் தரப்பு ஆதரவு அரசியல் அங்கத்தவர்தான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி உதய கம்பன்பில. பிள்ளையானுக்கும், சலேவுக்கும் ஆதரவு தேடும் எதிர்கட்சிகளின் தற்போதைய அரசியல் தூதர்.
நேற்றும் கூட பிள்ளையான் நெடுநாள் கழித்து முக்கிய விசாரணைக்காக நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டார். இது குறித்தும் கம்பன்பில எதிர்ப்பு கருத்துக்களை பதிவுசெய்துள்ளார்.
இது இவ்வாறிருக்க தந்திர அரசியல்வாதியான உதய கம்மன்பிலவால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் 'ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரியைத் தேடுதல்' என்ற தலைப்பிலான புத்தகம், மார்ச் 31 அன்று கொழும்பில் வெளியிடப்பட்டது.
நூல் வெளியீட்டு விழா
இந்நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் ஜனாதிபதிகள் மைத்ரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு எதிர்கட்சி தலைவரின் பிரசன்னம் முக்கியமானது. அதிக விமர்சனங்களையும் பெற்றிருந்தது. ஒருபுறம் ராஜபக்சர்களின் ஆட்சியையும் உயிர்த்த ஞாயிறு விசாரணையையும் மேடையிட்டு விமர்சித்தவர்.

ஆனால் இன்று அவர்களின் அருகே அமர்ந்து சூத்திரதாரியை அடையாளமிட வந்துள்ளார் என்பது இன்னோரு விமர்சனம்.
இது அரசியல் பாய்ச்சலாக பார்க்கப்பட்டாலும் ஒருபுறம் கம்மன்பிலவின் அழைப்புக்கு கொடுத்த மரியாதையாக கூட இருக்கலாம் அல்லவா?
சில சமூக ஊடக பதிவில் சூத்திதிரதாரிகளின் முன்னே கம்பன்பில யாரை தேருகிறார் என கிண்டலடித்து இருந்தனர்.
கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும் பொருட்டு அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் ஈஸ்டர் தாக்குதல்களைத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தேசிய புலனாய்வுத் துறை இயக்குனர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கம்மன்பில திடீரென இந்தப் புத்தகத்தை வெளியிட்டு, விழாவுக்கு முன்பாக ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி "சஹ்ரான் ஹாஷிம்" என்று அறிவித்தார்.
இருப்பினும், ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்பே, இந்த விழாவில் கலந்துகொண்ட மூன்று முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அத்தகைய தாக்குதல் நடக்கப்போகிறது என்பது ஏறக்குறைய தெரிந்திருந்தது என்பதற்கு ஆதாரங்கள் இருந்ததாகப் பலமுறை கூறப்பட்டுள்ளது.
இது சனல்4 காணொளி ஆவணத்தில் விளக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகளும் தற்போது நடைபெறுகிறது. 2019-ஆம் ஆண்டு நடந்த கோரமான ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் ஏழாண்டு நினைவு நாள் நெருங்கி வரும் நிலையில், நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்து சமூகத்தில் ஒரு சூடான விவாதம் எழுந்துள்ளது.
மைத்திரிபால சிறிசேன
அப்போதைய நிறைவேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்கு தொடர்பான பல தீவிரமான பிரச்சினைகளை புலனாய்வாளர்கள் இன்னும் கவனிக்கவில்லை என்று தெரிகிறது.

தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்கும், தனது கடமையில் இருந்து தவறியதற்கும் இழப்பீடாக ரூ. 100 மில்லியன் செலுத்துமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும், இது வெறும் கடமைத் தவறு என்பதைத் தாண்டியது. மேலும், இந்தத் தாக்குதல்கள் குறித்து அவருக்குத் தெரிந்திருந்தது என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
தான் வாய் திறந்தால், ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரிகளும் அனைத்து உண்மைகளும் வெளிப்படும் என்று மைத்திரிபால சிறிசேன ஊடகங்களிடம் பலமுறை கூறியுள்ளார்.
இது வெறும் ஒரு கூற்று மட்டுமல்ல, தாக்குதலுக்குப் பின்னால் இருப்பவர்களை அச்சுறுத்துவதற்காகவோ அல்லது மிரட்டுவதற்காகவோ அவரால் கூறப்பட்ட ஒரு தந்திரோபாய அறிக்கையாகும்.
அவருக்கு உண்மையிலேயே ஏதேனும் தெரிந்திருந்தால், ஏன் அவர் அரசாங்க சாட்சியாக மாறி அந்தத் தகவலை வெளியிடவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஈஸ்டர் தாக்குதல்களின் போது மைத்திரிபால சிறிசேன கவனமாகத் தவறாக வழிநடத்தப்பட்டார்.
அதன் பிரதம ஒருங்கிணைப்பாளர், அப்போதைய அரச புலனாய்வு சேவையின் தலைவரான நிலந்த ஜெயவர்தன ஆவார். அக்காலத்தில் மைத்திரிபால சிறிசேன போதைப்பொருள் சோதனைகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுத்து வந்ததால், அவருக்கு எதிராக ஒரு தாக்குதல் நடத்தப்படலாம் என்று நிலந்த ஜெயவர்தன புலனாய்வு மூலம் அவரை நம்ப வைத்திருந்தார்.
இதனால், ஆசியாவின் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஜனாதிபதியைக் குறிவைக்கப் போகிறார்கள் என்று மைத்திரிபால நம்பினார். 2018-ஆம் ஆண்டு நடந்த 52 நாள் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பிறகு மைத்திரிபால சிறிசேனவின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்திருந்தது.
ஒரு தாக்குதல் உடனடியானது என்று தெரிந்திருந்தபோதிலும், தனக்குள்ள அச்சுறுத்தலைக் காட்டி, பொதுமக்களின் கவனத்தையும் நற்பெயரையும் மீண்டும் பெறுவதற்காக, அவர் அதைத் தவிர்க்கவோ அல்லது நாட்டிற்கு வெளியே இருக்கவோ தேர்ந்தெடுத்தார்.
சரிந்துகொண்டிருந்த அரசியல்
அவர் மீண்டும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட நம்பியிருந்ததால், இந்தச் சூழ்நிலையை ஒரு அரசியல் ஆதாயமாகப் பயன்படுத்த விரும்பினாரா என்ற கேள்வி எழுகிறது. ஈஸ்டர் தாக்குதல்கள் நடந்த நாளிலோ அல்லது அதைச் சுற்றியுள்ள நாட்களிலோ இலங்கையில் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறும் என்பதை மைத்திரிபால சிறிசேன தெளிவாக அறிந்திருந்தார் என பல குற்றச்சாட்டுக்கள் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டன.

ஆனால், அது அவர் எதிர்பார்த்த வகையான தாக்குதல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அந்தத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் நீண்ட காலமாக ஜனாதிபதியை கவனமாகத் தவறாக வழிநடத்தி வந்தனர். இந்தத் தவறான வழிநடத்தல், ஜனாதிபதியின் மிக நெருக்கமான மற்றும் மிகவும் நம்பிக்கைக்குரிய அதிகாரியும், அக்காலத்தில் அரச புலனாய்வு சேவையின் தலைவருமான நிலந்த ஜெயவர்தன மூலமாக மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
அவரே, தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கும் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான தொடர்பு அதிகாரியாக இருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தெற்காசியாவின் மிகவும் சக்திவாய்ந்த போதைப்பொருள் தலைவர்களில் ஒருவரான தாவூத் இப்ராஹிம் போன்ற குழுக்களால் தாம் குறிவைக்கப்படுவதாக ஜனாதிபதியை உளவுத்துறை அமைப்புகள் நம்ப வைத்ததாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில், போதைப்பொருள் சோதனைகள் தொடர்பாக மைத்திரிபால சிறிசேன பெரும் விளம்பரத்தைப் பெற்று வந்ததால், உலகளாவிய போதைப்பொருள் பாதாள உலகத்தின் இலக்காகத் தாம் மாறிவிட்டதாக அவர் உறுதியாக நம்பியிருக்க கூடும்.
இந்த அச்சுறுத்தலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் ஜனாதிபதி நாட்டிற்கு வெளியே இருக்குமாறு புலனாய்வு அமைப்புகள் அவருக்கு அறிவுறுத்தியிருந்தன. அதன்படி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்குத் தெரிவிக்காமலேயே, நிலந்த ஜயவர்தனவின் அறிவுறுத்தல்களின் பேரில் அவர் ஒரு குறுகிய விடுமுறைக்காக சிங்கப்பூருக்கு இரகசியமாகச் சென்றது அம்பலமானது.
இந்த காலத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் மூலமாகவும், தான் குறிவைக்கப்பட்டதை உலகிற்கு அறிவிப்பதன் மூலமாகவும், சரிந்துகொண்டிருந்த தனது அரசியல் நற்பெயரை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று மைத்திரிபால சிறிசேன நம்பியிருக்கலாம் என சில உள்நாட்டு ஆய்வாளர்கள் தமது கட்டுரையில் அடிகோடிட்டுள்ளனர்.
52 நாள் அரசாங்கம் முடிவுக்கு வந்த பின்னர்(2018 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின்போது, ஒக்டோபர் 26 முதல் டிசம்பர் 15 வரை, 52 நாட்கள் மகிந்த) பிரதமராக இருந்த காலம் "52 நாள் அரசாங்கம்" என அழைக்கப்படுகிறது) மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான அனைத்து உறவுகளும் முறிந்துவிட்டன.
அந்த நேரத்தில், மகிந்த அணியின் ஆதரவுடன் 2019 ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராவதே சிறிசேனவின் ஒரே நம்பிக்கையாக இருந்தது. தாக்குதல் நடந்த அதே மாலையில், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு சாலையில் குழாய்க் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இந்தக் குண்டு குறித்து முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் கடந்த காலங்களில் காணப்பட்டன. பாதுகாப்புப் படைகள் இந்தக் குண்டு குறித்து விசாரிக்காததால், மைத்திரிபால சிறிசேனவை மேலும் திசைதிருப்பும் நோக்கில் வேண்டுமென்றே வைக்கப்பட்ட குண்டு இது என்பது பின்னர் விசாரணைகலில் தெரியவந்தது.
கோட்டாபய ராஜபக்ச
உண்மையான தாக்குதல்தாரிகளின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கும், ஜனாதிபதி நம்பியது போல் தாக்குதல் கட்டுப்படுத்தக்கூடியது என்று காட்டுவதற்கும் இது பயன்படுத்தப்பட்டது என்பதும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்சவின் பங்கை மறக்க முடியாது. ஈஸ்டர் தாக்குதலின் போது கோட்டாபய ராஜபக்ச, மைத்ரிபால சிறிசேனவின் அதிகாரப்பூர்வமற்ற பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார் என்பது தெளிவாகிறது.
கிடைத்துள்ள தகவல்களின்படி, அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் தேசியப் பாதுகாப்பைக் குலைக்கும் ஒரு பணியை சூத்திரதாரிகள் கோட்டாபய ராஜபக்சவிடம் ஒப்படைத்திருந்ததாகத் தெரிகிறது என சில தினங்களுக்கு முன்னர் வெளியாகிய தென்னிலங்கை நாளிதல் ஒன்றில் விளக்கப்பட்டது.
சிறிசேனாவுடன் நெருங்கிய பிறகு, கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புப் படைகளான காவல்துறை, இராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை முறித்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இதன் விளைவாகவே, அப்போது வழக்கமான பாதுகாப்புக் குழு கூட்டங்கள் கூட முறையாக நடத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்படுகிறது.
பாதுகாப்புக் குழு கூட்டங்களுக்கு நாட்டின் பிரதமரையோ அல்லது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரையோ அழைக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த நிலைமை தேசிய பாதுகாப்பை மிகவும் பலவீனமான நிலைக்குக் கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது.
எனவே, ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த உண்மையை வெளிக்கொணர்வதற்கான எளிய வழி, மைத்திரிபாலவிடம் விரிவாக விசாரணை நடத்துவதே ஆகும். அவருக்குத் தெரிந்த தகவல்கள் மற்றும் அவரைத் தவறாக வழிநடத்திய தரப்பினர் யார் என்பது குறித்து முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால், இந்த மாபெரும் பேரழிவின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகள் விரைவில் அடையாளம் காணப்படுவார்கள்.
இது நிகழாவிட்டால், ஈஸ்டர் விசாரணைகள் இன்னும் பல ஆண்டுகளுக்குத் தொடரும் என்பது தெளிவாகிறது...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்