தமக்கு தாமே குழி தோண்டிய ஊழியர்கள் - கனடாவில் பெரும் சோகம்
பள்ளத்திற்குள்புதையுண்டு சடலமாக மீட்கப்பட்ட ஊழியர்கள்
பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களில் இருவர் அந்தப்பள்ளத்திற்குள்ளேயே புதையுண்டு சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் அஜாக்ஸ் பகுதியில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒன்ராறியோ மாகாணத்தில் அஜாக்ஸ் நகரில் திங்கட்கிழமை பள்ளம் தோண்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நண்பகல் நேரம், எதிர்பாராத வகையில் குறித்த பள்ளம் மொத்தமாக இடிந்து விழுந்துள்ளது.
இதில் இருவர் மொத்தமாக மண்ணுக்குள் புதைந்து போக, இருவர் காயங்களுடன் தப்பியுள்ளதாக தகவல் வெளியானது.
தீயணைப்பு, மீட்புக்குழுவினர் வரவழைப்பு
இதனையடுத்து ஹெலிகொப்டர் அம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி ஒருவர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இன்னொருவர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டு, புதைந்து போன ஊழியர்களை மீட்கும் பணி இரவு முழுவதும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நள்ளிரவு 2.30 மணியளவில் புதைந்து போன இரு தொழிலாளர்களின் உடல்களை மீட்டுள்ளதாக டர்ஹாம் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர். இதனிடையே, தொழிலாளர்கள் நல அமைச்சகம் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.