சீனாவில் பயங்கர வெடிப்புச் சம்பவம் - பலி எண்ணிக்கை 16ஆக அதிகரிப்பு
சீனாவில் எரிவாயு கசிவால் ஏற்பட்ட பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் (இடிபாடுகளில்) சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றுமுன்தினம், தென்மேற்கு சீனாவில் உள்ள சோங்கிங் நகரில், அரச அலுவலகத்தின் வளாகத்தில் இயங்கிவந்த உணவகத்தில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு, உணவகம் இடிந்து விழுந்தது.
இதனால் உணவகத்தில் மதிய உணவு உட்கொண்டிருந்த பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
இந்தக் கோர விபத்தில் 3 பேர் உடல் நசுங்கி பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில், இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்தும் நடந்த மீட்பு பணிகள் நேற்று அதிகாலை முடிவுக்கு வந்த நிலையில், இடிபாடுகளில் இருந்து மேலும் 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாகவே இலங்கையை அச்சுறுத்திவரும் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீனாவிலும் இதன் தாக்கம் பதிவாகியுள்ளது.