புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ரணிலுடன் அதானி கலந்துரையாடல்
சிறிலங்காவில் பல்வேறுபட்ட திட்டங்களை ஆராய்வதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துப் பேசியதாக இந்தியாவின் பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.
"கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனையத்தின் 500 MW மெகாவாட் காற்றாலை திட்டத்தின் தொடர்ச்சியான அபிவிருத்தி, மற்றும் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான எங்களின் ஆற்றல் நிபுணத்துவத்தை விரிவுபடுத்துதல் மாத்திரமல்லாமல் சிறிலங்காவில் செயற்படுத்தவுள்ள பல திட்டங்கள் தொடர்பிலும் விவாதிக்க அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தமை பெருமையாக உள்ளது" என்று அதானி தனது டுவிட்டர் பக்கத்தில் பதவு செய்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம்
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இரண்டு நாள் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போதே இந்த சந்திப்பு நடந்துள்ளது.
அதானியின் நிறுவனம், கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம், நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள பூநகரியில் காற்றாலை மின் திட்டங்களை தொடங்க ஒப்புதல் அளித்திருந்தது.
சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலரிற்கும் அதிகமான தற்காலிக முதலீட்டில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் மன்னாரில் 286 MW மெகாவாட் மற்றும் பூநகரியில் 234 MW மெகாவாட் திறன் கொண்ட இரண்டு காற்றாலை திட்டங்களை அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் உருவாக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
2021 ஆம் ஆண்டு ஒக்டோபரில் கௌதம் அதானி அப்போதைய அதிபர் கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்து கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் அவர் கூறினார்.