வடக்கில் காணி அபகரிப்பு சதி : அரசுக்கு தொடர் அழுத்தம் கொடுக்கும் சுமந்திரன்
வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் குறித்து அரசின் முடிவை அறிவிப்பதற்கு அரசாங்கம் தயங்குவது ஏன் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் (ITAK) எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபற்றி தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றை வைத்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வடக்கில் 5940 ஏக்கர் காணிகளுக்கான தமது உரித்தை நிரூபிக்குமாறு காணி நிர்ணயச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம், காணி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இம்மாதம் 28 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.
வர்த்தமானி அறிவித்தல்
அவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எதிர்ப்பை வெளிப்படுத்தி சட்டமறுப்புப்போராட்டத்தை நடாத்துவது குறித்து நாம் வழங்கிய காலக்கெடு முடிவடைவதற்கு ஒருநாள் இருக்கையில், அதனை மீளப்பெறப்போவதாகக் கடந்த மாதம் 27 ஆம் திகதி அரசு அறிவித்தது. அவ்வாக்குறுதி உடனடியாக நிறைவேற்றப்படும் என நாம் எதிர்பார்த்தோம்.
ஆனால் இரண்டு வாரங்கள் கடந்தும் இவ்வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்படாததன் காரணமாக, அதுகுறித்து கடந்த 12 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்தேன்.
கடந்த செவ்வாயன்று இவ்வழக்கு ஆதரிப்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அமைச்சரவையின் அறிவுறுத்தல் பெறுவதற்கு சட்டமா அதிபர் இன்று வரை (நேற்று) கால அவகாசம் கோரியிருந்தார்.
அநுர அரசின் தயக்கம்
அதனையடுத்து வெள்ளிக்கிழமை (20) வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அரசின் முடிவை அறிவிப்பதற்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் கால அவகாசம் கோரியிருக்கிறார்.
இது மேற்படி வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருக்கும் காலக்கெடு முடிவடைவதற்கு ஒருநாள் அவகாசத்தை மாத்திரமே கொண்டிருக்கிறது.
இதற்கிடையில், நிதி அமைச்சின் செயலாளராக கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறெனில், இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தாம் தீர்மானித்திருப்பதாகக் கூறியதை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தயங்குவது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
