யுத்தக் குற்ற விசாரணை விவகாரம் - முக்கிய ஆவணத்தில் கையெழுத்திடவில்லை என்கிறார் மட்டு முதல்வர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்யப்பட வேண்டும் என ஜெனீவாவிற்கு அனுப்பப்பட்டதாக கூறி சமூக ஊடகங்களில் வெளியாகும் கடிதத்தில் தாம் கையெழுத்திட்டதாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு எதிரான எந்தவிதமான ஆவணத்திலும் தாம் கையெழுத்திடுவதில்லை என மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் தன்மைக்கு மேலும் இறுக்கமான ஒரு செயற்பாடாகவே ஐ.நா ஆணையாளரின் கருத்தை நான் பார்க்கின்றேன்.
இலங்கை அரசாங்கம் மிகவும் சிக்கலான ஒரு நிலைப்பாட்டுக்கு தள்ளப்பட்டிருக்கிறது என்பது தெளிவாக விளங்குகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பால் அனுப்பப்பட்ட ஆவணங்களும் ஐ.நாவில் பரிசீலிக்கப் பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையில் சில பிழையான விடயங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான எத்தனிப்புகள் நடைபெறுவதாக அறிய முடிகின்றது. பொதுமக்களாகிய நீங்கள் இந்த விடயங்களில் மிகத்தெளிவாக இருக்க வேண்டும்.
மட்டக்களப்பு மாநகர சபையில் எந்தவிதமான சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கும் ஊழல் செயற்பாடுகளுக்கும் இடம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.