சிரியாவில் மீண்டும் திறக்கப்பட்ட ஜேர்மன் தூதரகம்
சிரியாவில் (Syria) 13 ஆண்டுகளுக்கு பின்னர் ஜெர்மன் (Germany) நாட்டு தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
சிரியாவில் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத்தின் (Baššār al-Asad) ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற உள்நாட்டு போர் ஆரம்பமான காலத்தில் அந்நாட்டிலிருந்த ஜேர்மனியின் தூதரகம் (2012) மூடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சுமார் 13 ஆண்டுகள் கழித்து ஜேர்மனியின் தூதரகத்தை அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அன்னாலேனா பயிபோக் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் இன்று (20.03.2025) திறந்து வைத்துள்ளார்.
ஆசாத்தின் ஆட்சி கவிழ்ப்பு
இந்நிலையில், ஆசாத்தின் அரசு கவிழ்க்கப்பட்ட பின்னர் இரண்டாவது முறையாக சிரியாவுக்கு வருகை தந்துள்ள அமைச்சர் அன்னாலேனா, தனது வருகை சிரியா மற்றும் ஐரோப்பா, ஜேர்மனுக்கு இடையிலான புதிய அரசியல் தொடக்கத்தை உருவாக்கக் கூடும் எனக் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 27 உறுப்பு நாடுகளில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆசாத்தின் ஆட்சி கவிழ்ப்புக்கு முன்னர் இத்தாலி சிரியாவிலுள்ள அதன் தூதரகத்தை மீண்டும் திறந்தது.
பின்னர், அவரது ஆட்சி கவிழ்ந்து இடைக்கால அரசு அமைந்ததுடன் ஸ்பெயின் நாடும் அதன் தூதரகத்தை மீண்டும் சிரியாவில் திறந்துள்ளது.
இதேவேளை இம்மாத ஆரம்பத்தில் ஆசாத்தின் ஆதரவுப் படைகளுக்கும் இடைக்கால அரசின் இராணுவத்துக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனை சுட்டிக்காட்டி அமைச்சர் அன்னலேனா கூறுகையில், சிரியாவின் இடைக்கால அரசின் ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷாரா இந்த மோதல்களை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்