அல்லைப்பிட்டிச் சூட்டுச் சம்பவம் : புலனாய்வுப் பிரிவினர் அளித்த அறிக்கை!
யாழ்ப்பாணம் – அல்லைப் பிட்டியில் ஊர்காவற்றுறை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 17 வயதான சிறுவன் உயிரிழந்த வழக்கில், 15 பேரிடம் ஆரம்ப விசாரணை நடத்த வேண்டும் என மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கை வழங்கியுள்ளது.
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி அனிபாரஜீப் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இந்த விசாரணையை விரைவில் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
நீதிமன்றம் விடுத்த உத்தரவு
இதனைக் கருத்தில் எடுத்த நீதிமன்றம் விரைவான விசாரணைக்கான கட்டளைகளைப் பிறப்பித்தது. அதன்படி, இரண்டு பொதுமக்கள், ஊர்காவற்றுறை காவல்துறையினர், யாழ். குற்ற விசாரணைப் பிரிவினர், சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட 15 பேரை நீதிமன்றத்துக்கு செப்ரெம்பர் 4ஆம் திகதி அழைத்து அவர்களிடம் ஆரம்ப விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதற்கான அழைப்புக் கட்டளையை உடனடியாக அனுப்புமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

முன்பதாக, வேலணை அல்லைப்பிட்டிப் பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அதிகாலை பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட காவல்துறையினர், 1.15 மணியளவில் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டிப் பகுதியில் ஹைஏஸ் ஒன்றை இடைமறித்திருந்தனர். எனினும், அந்த ஹைஏஸ் வாகனம் காவல்துறையினரின் உத்தரவுக்குக் கட்டுப்படாமல் வேகமாகப் பயணித்துள்ளது.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வாகனத்தைச் செலுத்திச் சென்ற 17 வயதான சிறுவன் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |